Such (is the Pilgrimage): whoever honours the sacred rites of God, for him it is good in the Sight of his Lord. Lawful to you (for food in Pilgrimage) are cattle, except those mentioned to you (as exceptions): but shun the abomination of idols, and shun the word that is false,- AL-Qur'aan - 21:30

Wednesday, November 17, 2010

இந்தியாவுக்கும் வருமா இஸ்லாமிய வங்கி ?

 



ண்மையில் மலேசியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், அந்த நாட்டில் இஸ்லாமிய வங்கிகள் (Islamic Banking) சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும் இந்தியாவில் இஸ்லாமிய வங்கியைத் தொடங்க ஆர்.பி.ஐ. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து இஸ்லாமிய வங்கி என்றால் என்ன? அது எப்படி நடக்கிறது என்கிற ஆர்வம் பலரது மனதில் எழுந்திருக்கிறது.
இஸ்லாமிய கொள்கையான 'ஷரியா'-வின்படி (Sharia) நடக்கும் வங்கிகளைத்தான் இஸ்லாமிய வங்கிகள் என்கிறார்கள். கடனுக்கு வட்டி வாங்குவது 'ஷரியா'-வின் படி தவறாகும் . இஸ்லாமிய மார்க்கத்தின்படி இது குற்றம். ஒருவருக்குக் கொடுக்கும் கடனுக்கு வட்டி வாங்காமல், அவர் முதலீடு செய்யும் தொழிலில் கிடைக்கும் லாப நஷ்டத்தைப் பகிர்ந்து கொள்வதுதான் இஸ்லாமிய வங்கியின் சிறப்பு. பல நூற்றாண்டுகளாகவே இந்த முறை முஸ்லீம் நாடுகளில் நடைமுறையில் இருந்து வருகிறது. எனினும் 20-ம் நூற்றாண்டின் இறுதியில்தான் இஸ்லாமிய வங்கிகள் நடைமுறைக்கு வந்தன.
வழக்கமாக வர்த்தக வங்கிகளில் கொடுக்கப்படும் கடனுக்கு வட்டி வசூலிக்கப்படும். இஸ்லாமிய வங்கியைப் பொறுத்தவரை, கடன் கொடுப்பவரும் வாங்குபவரும் பங்குதாரர்களாக ஆகிவிடுகிறார்கள். அவர்கள் அந்தத் தொழிலை சிறப்பாக நடத்தி லாபம் சம்பாதிக்க வேண்டும். நஷ்டம் ஏற்பட்டால் அதைப் பகிர்ந்து கொள்கிறோம் என்பதை முன்னரே ஒப்புக் கொண்டு அதன்படி நடக்க வேண்டும் என்பது இஸ்லாமிய வங்கியின் சிறப்பு. மனை, வீடு போன்ற ஏதாவது சொத்தை ஜாமீனாகக் கொடுத்தால் மட்டுமே இஸ்லாமிய வங்கிகளில் தொழிற்கடன் கிடைக்கும் என்பது முக்கியமான விஷயம்.

சரி, வாகனக் கடனை இஸ்லாமிய வங்கிகள் எப்படிக் கொடுக்கின்றன? வாகனத் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து இஸ்லாமிய வங்கி முதலில் காரை வாங்கிவிடும். அதனை வங்கி வாடிக்கையாளருக்கு லாபம் வைத்து அதிக விலைக்கு விற்கும். வாகனத்தை வாங்கியவர், அதற்கான தொகையை மாதத் தவணையில் கட்டி வர வேண்டும். முழுவதும் பணம் கட்டி முடிக்கும் வரை வாகனத்தின் உரிமை இஸ்லாமிய வங்கியிடம் இருக்கும்.

இஸ்லாமிய வங்கிகள் வீட்டுக் கடனை வழங்கும் விதமும் வித்தியாசமானது. வாடிக்கையாளர் வாங்க விரும்பும் வீடானது, வங்கி மற்றும் வாடிக்கையாளரின் பெயரில் கூட்டுச் சொத்தாக பதிவு செய்யப்படும். இதில், யார் எவ்வளவு பணத்தை முதலீடு செய்கிறார்கள் என்றும் குறிப்பிடப்படும். பிறகு இந்தச் சொத்து வாடிக்கையாளருக்கு வாடகைக்கு விடப்படும். இந்த வாடகைத் தொகை, சொத்தில் வங்கி மற்றும் வாடிக்கையாளருக்கு உள்ள பங்கிற்கு ஏற்ப பிரிக்கப்பட்டு, வங்கிக்கு உரிய பங்கை (அதிகரிக்கப்பட்ட விலையில்) மாதம்தோறும் குறிப்பிட்ட தொகையைக் கட்டி வாடிக்கையாளர் அந்த வீட்டை சொந்தமாக்கிக் கொள்ளலாம். இது கிட்டத்தட்ட வீட்டுக் கடனுக்காக நாம் கட்டும் இ.எம்.ஐ. போல் இருக்கும். வாடிக்கையாளரால் பணத்தைச் சரியாகக் கட்ட முடியவில்லை என்றால் அந்த வீட்டை விற்று, வங்கி மற்றும் வாடிக்கையாளருக்கு உள்ள பங்கிற்கு ஏற்ப பிரித்துக் கொள்ளப்படும்.

ஈரான், மலேசியாவில் இஸ்லாமிய வங்கிகள் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன. ஜப்பான், ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளில் இஸ்லாமிய வங்கிகளின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருவது முக்கியமான விஷயம். வர்த்தக வங்கி மற்றும் இஸ்லாமிய வங்கி நடைமுறைகளைப் பற்றி நன்கு அறிந்திருக்கும் தோஹா வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி சீதாராமன், இஸ்லாமிய வங்கிகள் சிறப்பான வளர்ச்சி கண்டு வருவதாகச் சொன்னார்.

''உலகம் முழுக்க கடந்த ஐந்தாண்டுகளில் வர்த்தக வங்கிகளின் வளர்ச்சி 2%-மாக உள்ளது. இதே காலத்தில் இஸ்லாமிய வங்கிகளின் வளர்ச்சி 12-15%-மாக இருக்கிறது. இப்போது உலக அளவில் இஸ்லாமிய வங்கிகள் நிர்வகித்து வரும் சொத்துகளின் மதிப்பு ஒரு டிரில்லியன் டாலருக்கும் அதிகம். சர்வதேச நிதியம் (IMF- International Monetary Fund) மற்றும் உலக வங்கிகளின் நிதி நிர்வாக அமைப்பான பேசல் (Basel) இஸ்லாமிய வங்கி நடைமுறைகளை அங்கீகரித்துள்ளன'' என்றார்.

தற்போது இந்தியாவில் ஷரியா கொள்கை அடிப்படையிலான மியூச்சுவல் ஃபண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான முதலீட்டாளர்கள் முதலீடு செய்கிறார்கள். இந்த ஆண்டுக்குள் இந்தியாவில் இஸ்லாமிய வங்கி ஒன்றை ஆரம்பிக்க ஐ.டி.பி.ஐ. வங்கி முயற்சி எடுத்து வருகிறது. இந்தியாவில் இஸ்லாமிய வங்கிகளைக் கொண்டு வர வேண்டும் என்றால் அவற்றுக்கென பிரத்தியேக சட்டம் தேவை என ஆர்.பி.ஐ. கவர்னர் சுப்பாராவ் அண்மையில் கருத்துத் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு இஸ்லாமிய வங்கிகள் வந்தால் நம் நாட்டிலுள்ள கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடைவார்கள்.

இஸ்லாமிய நாடுகள் இணைந்து 1975-ம் ஆண்டில் இஸ்லாமிய மேம்பாட்டு வங்கியை உருவாக்கின. அதே ஆண்டில் வர்த்தக ரீதியிலான இஸ்லாமிய வங்கி, துபாய் இஸ்லாமிய வங்கி என்ற பெயரில் உருவானது.

ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் 300-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.

கடந்த 1994-ம் ஆண்டு முதல் பஹ்ரைனில் ஆண்டு தோறும் உலக இஸ்லாமிய வங்கிகளின் மாநாடு நடந்து வருகிறது. இதில், இஸ்லாமிய வங்கிகளின் தலைவர்கள் பங்கேற்று அதன் வளர்ச்சிக்கான திட்டங்களைத் தீட்டி வருகிறார்கள்.

உலக அளவிலான இஸ்லாமிய வங்கிகளில் 60% ஈரானில் மட்டுமே இருக்கின்றன.

மதுபானம், சூதாட்டம் தொடர்பான முதலீட்டு விஷயங்களை இஸ்லாமிய வங்கிகள் தவிர்த்துவிடுகின்றன.

நன்றி : நாணயம் விகடன் 

Thursday, October 21, 2010

உம்மு ஸலமா பின்த் அபூ உமைய்யா (ரழி)


அன்னையவர்களின் இயற்பெயர் ஹிந்த் பின்த் உமைய்யா என்றிருந்த போதும், உம்மு ஸலமா (ரழி) என்றே மிகப் புகழோடு அழைக்கப்பட்டு வந்தார்கள். வரலாறு அவ்வாறே அவர்களது பெயரைப் பதிவு செய்து வைத்திருக்கின்றது. பிறப்பு மற்றும் வம்சா வழிச் சிறப்புகளின் அடிப்படையில், இயற்கையிலேயே புத்திக் கூர்மையுள்ள, கல்யறிவுள்ள, நேர்மையான மற்றும் உறுதியான செயல்பாடுகள் கொண்டவர்களாக அன்னையவர்கள் திகழ்ந்தார்கள்.

அன்னையவர்களின் முதற் கணவரின் பெயர், அபூ ஸலமா என்றழைக்கப்படக் கூடிய அப்துல்லா பின் அப்துல் அஸத் மக்சூமி (ரழி) என்பவராவார். இவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தந்தை வழி மாமியான பர்ரா பின்த் அப்துல் முத்தலிப் அவர்களின் மகனுமாவார். இஸ்லாத்தினைத் தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட ஆரம்ப கால முஸ்லிம்களின் பட்டியலில் அபூ ஸலமா அவர்களும் இடம் பிடித்த, சிறப்புக்குரியவர்களாவார்கள். அந்த கால கட்டத்தில் இஸ்லாத்தினைத் தழுவிய 11 நபர்களில் இவரும் ஒருவர். இன்னும் இவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பால் குடிச் சகோதரரும் ஆவார்.

உம்மு ஸலமா (ரழி) அவர்களும் இஸ்லாத்தினைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட ஆரம்பகால முஸ்லிம்களில் ஒருவராவார். இவரது தாயார் பெயர் அதீகா பின்த் ஆமர் பின் ரபீஆ பின் மாலிக் பின் கஸீமா ஆகும். இன்னும் இவரது தந்தையின் பெயர் உமைய்யா பின் அப்துல்லா பின் அம்ர் பின் மக்சூம் என்பதாகும். இவரது பொதுநலச் சேவைகள் மற்றும் தான தர்மங்களின் மூலமாக அரபுலகில் மிகவும் பிரபலமாக மதிக்கப்பட்டவர்களாவார்கள். இவருடன் பயணம் செய்யக் கூடியவர்கள் தங்களது தேவைக்காவென எந்தப் பொருட்களையும் தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. தன்னுடன் வரக் கூடியவர்கள் அனைவரும் தனது விருந்தாளிகள் என மதிப்பளித்து, அவர்களது உணவிலிருந்து அத்தனைச் செலவுகளையும் பொறுப்பேற்றுச் செலவு செய்யக் கூடிய தனவந்தராக உம்மு ஸலமாவின் தந்தை திகழ்ந்தார். எனவே, தனது தந்தையைப் போலவே உம்மு ஸலமா அவர்களும் ஏழைகளுக்கு இரங்கக் கூடியவராகவும், இன்னும் தான தர்மங்களில் அதிகம் ஈடுபடக் கூடியவராகவும் திகழ்ந்தார்கள். தமது அண்டை வீட்டுக்காரர்களுடன் உணர்வுப்பூர்வமாக மிகவும் நெருக்கமான உறவும் கொண்டிருந்தார்கள். உம்மு ஸலமா அவர்களின் கோத்திரம் எவ்வாறு உபகாரத்திலும், பிறருக்கும் உதவுவதிலும் இன்பங்கண்டதோ, அதே போலவே குணங்கள் அமையப் பெற்றவரும், மக்காவில் அன்றைய தினம் வாழ்ந்த குறிப்பிடத்தக்க செல்வந்தக் குடும்பங்களில் ஒன்றான மக்சூம் குலத்திலிருந்து வந்தவராக அபூ ஸலமா அவர்களைக் கைப்பிடித்து, மணமகளாக மக்சூம் கோத்திரத்தாரின் இல்லத்திற்கு சென்ற உம்மு ஸலமா அவர்கள், அங்கும் தனது பெருந்தன்மையான குணங்களின் மூலம் அனைவருக்கும் பிடித்தமான நங்கையாகத் திகழ ஆரம்பித்தார்கள். இப்பொழுது மக்சூம் குடும்பங்களில் அன்பும், விருந்தோம்பலும் இன்னும் அனைத்து வித சந்தோஷங்களும் கரை புரண்டோட ஆரம்பித்தன.

ஆனால், இந்த சந்தோஷங்களும், குதூகுலங்களும் அபூ ஸலமா தம்பதியினர் இஸ்லாத்தைத் தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டு விட்டதன் பின்பு, தலைகீழாக மட்டுமல்ல, அடியோடு அந்தச் சூழ்நிலைகள் மாற்றம் பெற ஆரம்பித்தன.

முழு கோத்திரத்தாரும் இவர்களுக்கு எதிராகப் புயலெனக் கிளர்ந்தார்கள். பிறரைக் கொடுமைப்படுத்தி அதில் இன்பங் காண்பதே பிழைப்பாகக் கொண்டு திரியும், வலீத் பின் முகீரா போன்றவர்கள் இவர்களுக்கு தினம் தினம் புதுப் புதுப் பிரச்னைகளைக் கொடுக்க ஆரம்பித்தார்கள். இறுதியாக, மக்கத்துக் குறைஷிகளின் கொடுமைகள் தாங்கவியலாத நிலைக்குச் சென்ற பொழுது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்களை, மற்ற மதத்தவர்களுடன் அணுசரணையாகவும், சகிப்புத் தன்மையுடனும் நடக்கக் கூடியவரான நஜ்ஜாஸி மன்னர் ஆட்சி செய்து கொண்டிருந்த அபீஸீனியாவிற்கு அனுப்பி வைத்தார்கள். அவ்வாறு அபீஸீனியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த முதல் குழுவில் இருந்த 16 நபர்களில், 12 பேர் ஆண்களும், 4 பெண்களும் இடம் பெற்றிருந்தார்கள். இந்தப் 16 பேர் கொண்ட குழுவில் அபூ ஸலமாவும், உம்மு ஸலமாவும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தப் 16 பேர்களின் பெயர்கள் வருமாறு :-

1. உதுமான் பின் அஃப்பான் (ரழி)

2. அபூ ஹுதைஃபா பின் உத்பா(ரழி)

3. அபூ ஸலமா அப்துல்லா பின் அப்துல் அஸத் மக்சூமி(ரழி)

4. ஆமிர் பின் ரபீஆ(ரழி)

5. ஸுபைர் பின் அவ்வாம் (ரழி)

6. முஸ்அப் பின் உமைர்

7. அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி)

8. உதுமான் பின் அவ்ஃப் (ரழி)

9. அபூ ஸிப்ரா பின் அபீ ரஹம் (ரழி)

10. ஹாதிப் பின் அம்ர்(ரழி)

11. சொஹைல் பின் வஹ்ப் (ரழி)

12. அப்துல்லா பின் மசூத் (ரழி)

பெண்களின் பெயர்கள் வருமாறு :-

1. ருக்கையா பின்த் முஹம்மது (ரழி) (ஸல்) (உதுமான் பின் அஃப்பான் (ரழி) அவர்களின் மனைவி)

2. ஸிஹ்லா பின்த் சொஹைல் (ரழி) (அபூ ஹுதைஃபா பின் உத்பா(ரழி) அவர்களின் மனைவி)

3. உம்மு ஸலமா (அபூ ஸலமா (ரழி) அவர்களின் மனைவி)

4. லைலா பின்த் அபீ ஹஷ்மா (ரழி) (ஆமிர் பின் ரபீஆ (ரழி) அவர்களின் மனைவி)

இந்தக் குழுவினர் அபிஸீனியாவிற்குச் செல்வதற்கு கடற்கரையை அடைந்த பொழுது, இரண்டு கப்பல்கள் அந்தத் துறைமுகத்தில் அபீஸீனியாவிற்குச் செல்வதற்காகக் காத்திருந்தன. அதில் ஏறிக் கொண்ட இந்தக் குழுவினர், அபிஸீனியாவைச் சென்றடைந்தனர்.

இந்த முதல் குழுவிற்கு அடுத்தாக ஒரு குழு அபிஸீனியாவிற்குக் கிளம்பியது. அதில் 83 ஆண்களும், 19 பெண்களும் அடங்குவர். இந்தக் குழுவில் ஜாஃபர் பின் அபீதாலிப் (ரழி) அவர்களும் இடம் பெற்றிருந்தார். அபிஸீனியாவில் தொடங்கிய புது வாழ்க்கை எந்தவித அடக்குமுறைகளும் இல்லாமல் மிகவும் அமைதியான முறையில் ஆரம்பித்தது. இவ்வாறு சென்ற குழுவில் முதன் முதலாக உம்மு ஸலமா (ரழி) அவர்கள், ஜைனப் என்ற பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்கள். இதனை அடுத்து உமர் என்ற மகவையும் பெற்றெடுத்தார்கள். இறுதியாக இன்னொரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்தார்கள், அதன் பெயர் துர்ரா.

அபிஸீனியாவின் மன்னர் நஜ்ஜாஸி அவர்கள் இந்தப் புது மார்க்கத்தை கடை பிடிப்பவர்களுடன் மிகவும் அன்பாக நடந்து கொண்டார். எனவே, மக்காவின் வாழ்க்கையோடு அபிஸீனியா வின் வாழ்க்கையை ஒப்பிடும் போது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாக, மிகவும் அமைதியாகக் கழிந்து கொண்டிருந்தது.

முஸ்லிம்கள் அபிஸீனியாவில் மன்னரது நன்மதிப்பைப் பெற்றுக் கொண்டதுடன், அங்கு அமைதியான வாழ்வை வாழ்கின்றார்கள் என்று கேள்விப்பட்ட மக்கத்துக் குறைஷிகள், இது புதுமார்க்கத்துக் கிடைத்த அங்கீகாரம். இந்த அங்கீகாரத்தை நீடிக்க விட்டால், அதுவே நமது பாரம்பரிய சமுதாயத்திற்கான சாவு மணி என்பதைப் புரிந்து கொண்ட அவர்கள், இந்த அமைதியை நீடிக்க விடக் கூடாது என்று அதற்கான சதித் திட்டங்களில் ஈடுபட ஆரம்பித்தார்கள். வளர்ந்து வரும் இஸ்லாத்தை, அதன் தூதை இனி வளரவே விடக் கூடாது, அதற்காக நாம் ஏதாவதல்ல, எதையாவது செய்தாக வேண்டும் என்று நிலைக்கு வந்தனர்.

மிக நீண்ட ஆலோசனைகளின் அடிப்படையில் அவர்கள், உறுதியான நடவடிக்கைகான செயல்முறைக்கு ஆயத்தமானார்கள். அன்றைக்கு அரபுலகின் மிகச் சிறந்த அரசியல் வல்லுநர்களாகக் கணிக்கப்பட்ட அம்ர் பின் ஆஸ் மற்றும் அப்துல்லா பின் ரபீஆ ஆகிய இருவரையும் பரிசுப் பொருட்களுடன் நஜ்ஜாஸி மன்னரது அவைக்கு அனுப்பி வைத்தார்கள். அதன் மூலம் நஜ்ஜாஸி மன்னரைச் சந்தித்து, முஸ்லிம்களைக் கைதிகளாக மக்காவுக்குக் கொண்டு வரத் திட்டமிட்டார்கள்.

நஜ்ஜாஸி மன்னரைச் சந்திப்பதற்கு முன்பாக, அவரது அமைச்சர்களையும், ஆலோசகர்களையும் முதலில் சந்தித்த இந்த மக்கத்துத் தூதுக் குழுவினர், இறுதியாகத் தான் நஜ்ஜாஸி மன்னரைச் சந்தித்தார்கள். அமைச்சர்களுக்கும், ஆலோசகர்களுக்கும் விலையுயர்ந்த பரிசுப் பொருட்களை வழங்கி, மன்னரைச் சந்திக்கும் பொழுது, மக்காவிலிருந்து வந்து குடியேறியுள்ள முஸ்லிம்களை வெளியேற்றுவதற்கு ஒருபக்கச் சார்பாகவும், தங்களுக்கு சாதகமான முறையில் மன்னருக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.

இறுதியாக, பரிசுப் பொருட்களுடன் மன்னரைச் சந்தித்த மக்கத்துக் குறைஷிகளின் குழு, மன்னருக்கு மரியாதை செலுத்தி விட்டு பரிசுப் பொருட்களையும் கொடுத்து விட்டு, தாங்கள் வந்ததன் காரணமென்னவென்பதை விளக்க ஆரம்பித்தார்கள்.

மன்னரே..! உங்களது நாட்டில் நீங்கள் அடைக்கலம் கொடுத்திருக்கின்ற இந்த முஸ்லிம்கள், எங்களது முந்தைய மார்க்கத்தைத் துறந்து விட்டு புதியதொரு மார்க்கத்தை ஏற்றுக் கொண்டு கலவரக்காரர்களாக இவர்கள் மாறி விட்டார்கள். அவர்களது புதிய மார்க்கத்தின் கொள்கையின் காரணமாக, இரத்த பந்தங்களுக்கிடையே பிரிவினையை உண்டு பண்ணுகின்றார்கள். தந்தையை மகனுக்கு எதிராகவும், சகோதரர்கள் சகோதரர்களுக்கு எதிராகவும் எதிர்த்து நிற்கக் கூடிய சூழ்நிலையை உருவாக்கி விட்டார்கள். எங்களது பாரம்பரியப் பழக்க வழக்கங்கள், கலாச்சாரம் மற்றும் முன்னோர்களது வழிமுறைகளைக் கூட இவர்கள் உடைத்தெறிகிறார்கள். உங்களது பரந்த மனப்பான்மையின் காரணமாக இவர்களை நீங்கள் அமைதியாக இங்கு வாழ விட்டிருக்கின்றீர்கள், ஆனால் இவர்கள் நம்பிக்கைக்குரியவர்கள் அல்லர். இந்த நாட்டிலே குழப்பத்தை உண்டு பண்ணக் காரணமாகி விடுவார்கள், ஏனெனில் இவர்கள் உங்களது மார்க்கமான கிறிஸ்துவத்தின் மீதும் நம்பிக்கை கொள்ளவில்லை. எங்களைப் போல நீங்களும் பிரச்னைகளிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டுமென்றால், இவர்களை நீங்கள் எங்கள் கையில் ஒப்படைத்து நாடு கடுத்துவதைத் தவிர வேறு வழி இல்லை, இவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்பதை எங்களைத் தவிர வேறு யாரும் அறிய மாட்டார்கள் என்று கூறி முடித்தார்கள்.

இப்பொழுது, நஜ்ஜாஸி மன்னர் தனது அவையோரைப் பார்த்து, நடக்கின்ற வழக்கில் நாம் என்ன தீர்ப்புச் சொல்வது என்று கேட்பது போல இருந்தது அவரது பார்வை. மந்திரிப்பிரதானிகளோ, இது அவர்களது உள்நாட்டுப் பிரச்னை நாம் ஏன் தலையிட வேண்டும், மேலும், குறைஷிகள் தங்களிடம் ஏன் அவர்களை ஒப்படைக்கச் சொல்கின்றோம் என்பதற்கு அவர்கள் கூறிய காரணமும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாகத் தான் இருக்கின்றது என்றும் அவர்கள் கருத்துக் கூறினார்கள். எனவே, இவர்களை அரசியல் குற்றவாளிகளாகக் கருதி, குறைஷிகளிடமே ஒப்படைத்து விடுவது நல்லது என்று கூறினார்கள்.

மன்னர் நஜ்ஜாஸி அனைவருடைய கருத்தையும் கேட்டுக் கொண்டு, நடுநிலையான, தொலைநோக்குச் சிந்தனை கொண்டு, எதனையும் வெளிப்படையாகப் பேசக் கூடிய அவர், இப்பொழுது தனது கருத்து என்னவென்பதைக் கூற ஆரம்பித்தார்.

தீர்ப்பு என்பது இருபக்கங்களின் விவாதங்களைக் கேட்ட பின்பே வழங்க வேண்டும் என்று முடிவெடுத்த மன்னர் நஜ்ஜாஸி, அகதிகளின் தலைவரை அழைத்து உங்களது பக்க வாதம் என்னவென்பதைக் கூறுமாறு பணித்தார். எனவே, தங்களது தரப்பு நியாயங்களை முன்வைப்பதற்காக, முஸ்லிம்கள் ஜாஃபர் பின் அபீதாலிப் (ரழி) அவர்களை தலைவராகக் கொண்ட குழுவை அனுப்பி வைத்தார்கள்.

மன்னர் நஜ்ஜாஸியின் அவைக்கு வந்த முஸ்லிம்களின் குழு மன்னருக்கு முகமன் தெரிவித்து விட்டு, தங்களுக்கான இருக்கையில் அமர்ந்து கொண்டு, தங்களது கருத்துக்களைக் கூற ஆரம்பித்தார்கள்.

பார்த்தீர்களா..! இந்த முஸ்லிம்களை..! இவர்கள் மிகவும் அகம்பாவம் பிடித்தவர்கள் என்று எதையோ குறை கண்டு பிடித்தவர் போலப் பேசிய அம்ரு இப்னுல் ஆஸ் அவர்கள், இந்த அவைக்கென மரியாதை இருக்கின்றது. இவர்கள் இந்த அவைக்குள் நுழைந்தவுடன் மன்னருக்கு சிர வணக்கம் செய்திருக்க வேண்டும் என்று குற்றச்சாட்டாகக் கூறினார்.

இப்பொழுது, மன்னர் முஸ்லிம்களைப் பார்த்துக் கேட்டார். நீங்கள் இந்த அவையின் ஒழுங்குகளை ஏன் பேணவில்லை..!?

நாங்கள் முஸ்லிம்கள்..! படைத்தவனை மட்டுமே வணங்கக் கட்டளையிடப்பட்டிருக்கின்றோமே ஒழிய, அவனது படைப்புகளை வணங்குமாறு எங்களுக்குக் கட்டளையிடப்படவில்லை. நாங்கள் படைப்புகளுக்கு சிரம்பணிய மாட்டோம் என்று தனது பக்க நியாயத்தைக் கூறினார், ஜாஃபர் பின் அபீதாலிப் (ரழி) அவர்கள்.

நீங்கள், ஏதோ ஒரு புதிய மார்க்கத்தைக் கண்டுபிடித்து அதனைப் பின்பற்றி வருவதாகக் கேள்விப்பட்டேனே..?! அதுபற்றி என்ன கூறுகின்றீர்கள் என்று கேட்டார் மன்னர் நஜ்ஜாஸி. இப்பொழுது, மீண்டும் தனது பதிலை ஆரம்பித்தார் ஜாஃபர் பின் அபீதாலிப் (ரழி) அவர்கள்..!

மேன்மை தங்கிய மன்னர் அவர்களே..! நாங்கள் நாகரீமற்ற மக்களாக சிலைகளை வணங்கிக் கொண்டிருந்தோம், செத்த பிராணிகளைத் தின்று கொண்டிருந்தோம் மற்றும் வடித்தெடுக்கப்பட்ட போதையூட்டும் மது பானங்களையும் அருந்திக் கொண்டிருந்தோம். எங்களுடைய சமூகத்தில் ஒரு குலம் இன்னொரு குலத்தாரை விட உயர்வாக எண்ணிக் கொண்டு, எங்களுக்குள் மாச்சரியங்களை வளர்த்துக் கொண்டு, அதன் காரணமாக நூறாண்டுகளுக்கும் மேலாகக் கூட பகைமையை வளர்த்துக் கொண்டிருந்தோம். நாங்கள் சொந்த பந்த உறவுகளை என்றுமே எங்களுக்குள் பேணிக் கொண்டதில்லை. எங்களிடம் காட்டுச் சட்டம் தான் மிகைத்திருந்தது. வலிமையுள்ளவன் செய்தது சரி என்ற சட்டமே மேலோங்கி இருந்தது. சுருங்கச் சொன்னால் நாங்கள் மிருகத்தைப் போலத்தான் வாழ்ந்து கொண்டிருந்தோம்.

பின் அல்லாஹ் எங்களிடையே ஒரு தூதரை அனுப்பி, எங்களை நேர்வழிப்படுத்தினான். அவர் எங்களில் ஒருவராகத் தான் இருந்து வருகின்றார், இன்னும் அவருடைய குலம் கூட எங்களால் நன்கு அறியப்பட்டது தான். அவரைப் பொறுத்தவரை அவரை நாங்கள் உறவுகளை ஒன்றிணைக்கக் கூடியவராக, மேன்மைக்குரியவராக இன்னும் கண்ணியமிக்கவராகக் காண்கின்றோம். அவர் எங்களை அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்றும், உண்மையையே பேச வேண்டும் என்றும், கொடுக்கல் வாங்கல்களில் நீதத்தைப் பேணுமாறும் இன்னும் வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறும் எங்களுக்கு அவர் அறிவுறுத்துகின்றார். இன்னும் அவர் எது அனுமதிக்கப்பட்டது என்றும், எது தடை செய்யப்பட்டது என்றும் அவர் எங்களுக்கு அறிவுறுத்துகின்றார். அநாதைகள், ஏழைகள், மற்றும் நோயாளிகள், பெண்கள் ஆகிய யாவரும் சம அந்தஸ்துடையவர்களே, நமது சமூகத்தில் அவர்கள் அனைவருக்கு உரிமைகள் உள்ளன என்றும் கூறுகின்றார். இன்னும் அவர்களது உரிமைகளைப் பறிப்பது தவறானது என்றும் கற்றுத் தந்திருக்கின்றார். கற்பையும் மற்றும் மானத்தையும் இன்னும் நல்லொழுக்கத்தையும் பேணிக் கொள்ளுமாறும், குற்றம் பிடிப்பது, கோள் சொல்லுதல் போன்றவற்றிலிருந்து விலகி இருக்குமாறும் அவர் எங்களுக்குப் போதிக்கின்றார். இன்னும் தொழுகையை முறையாகப் பேணுமாறும், இறைவனுக்காக நோன்பு இருப்பதையும், வருமானத்திலிருந்து ஏழைகளுக்கென ஒரு பங்கை ஒதுக்கி ஜகாத்தாக கொடுக்குமாறும் அவர் எங்களுக்கு கட்டளையிட்டிருக்கின்றார்.

இதனைப் பின்பற்றியே, உங்கள் முன் நாங்கள் இப்பொழுது முஸ்லிம்களாக இருந்து கொண்டிருக்கின்றோம் என்று கூறி விட்டு, சட்டம், ஒழுங்கைப் பேணக் கூடியவர்களாகவும், குற்றங்களிலிருந்தும், ஒழுக்கக் கேடுகளிலிருந்தும் தவிர்ந்து வாழக் கூடியவர்களாகவும், ஜெம்ன விரோதங்கள், பகைகளை மறந்து வாழக் கூடிய மனிதர்களாக நாங்கள் இன்று மாற்றம் பெற்றிருக்கின்றோம். அன்றைக்கு சமூகத்தை மறந்து வாழ்ந்து கொண்டிருந்த நாங்கள் தான், இன்று சமூகத்தைப் பற்றிச் சிந்திக்கக் கூடிய மக்களாக மாறி இருக்கின்றோம். தனக்கு எதனை விரும்புகின்றாரோ அதனையே தனது சகோதரனுக்கும் விரும்பக் கூடிய மக்களாகவும் நாங்கள் மாற்றம் பெற்றிருக்கின்றோம்.

இதன் காரணமாக எங்களது சமூகம் எங்கள் மீது வெறுப்புக் கொண்டு, எங்களுக்கு எதிராகப் போர்ப் பிரகடனம் செய்யாத குறையாக எங்களைத் தொந்தரவு செய்கின்றார்கள். ஆனால் அவர்களின் கொடுமைகளின் காரணமாக நாங்கள் மீண்டும் அந்தப் படுபாதகப் படுகுழியில் விழத் தயாராக இல்லை. எங்களின் மீது சொல்லொண்ணாக் கொடுமைகள் கட்டவிழ்த்து விடப்பட்டு அதன் உச்சத்தை அந்தக் கொடுமைகள் தாண்டிய போது தான், நாங்கள் எங்களது வாழ்விடங்களை விட்டு விட்டு, அகதிகளாக உங்களது நாட்டில் வந்து தஞ்சமடைந்திருக்கின்றோம். இன்னும் நீங்கள் நீதமான, நேர்மையான ஆட்சியாளர் என்பதையும், மத சகிப்புத் தன்மை கொண்டவர் என்பதையும், எங்கள் மீது கருணை காட்டக் கூடியவர் இன்னும் நல்லமுறையில் நடத்தக் கூடியவர்கள் என்பதையும் அறிந்த காரணத்தால் தான் இங்கு வந்திருக்கின்றோம்....,

... என்று கூறி முடித்தார் ஜாஃபர் பின் அபீதாலிப் (ரழி) அவர்கள்.

ஜாஃபர் (ரழி) அவர்களின் விளக்கத்தைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த மன்னர் நஜ்ஜாஸி அவர்கள்,

உங்களது இறைத்தூதருக்கு இறைவனிடமிருந்து தூதுச் செய்தி வருவதாக நான் கேள்விப்பட்டேன், அதிலிருந்து சிலவற்றை ஓதிக்காட்டுங்கள், அதனை நான் செவிமடுக்க விரும்புகின்றேன் என்று கூறினார்.

கிடைத்த அருமையான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த ஜாஃபர் (ரழி) அவர்கள், அத்தியாயம் மர்யம் லிருந்து சில வசனங்களை கேட்போர் மனதைக் கொள்ளை கொள்ளும் அளவுக்கு ஓத ஆரம்பித்தார்கள். திருமறையின் வசனங்களைச் செவிமடுத்த மன்னர் நஜ்ஜாஸியின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக ஓடி, அவரது தாடியை நனைத்துக் கொண்டிருந்தது. இறுதியாக, சுயநினைவிற்கு வந்த மன்னர், இது பைபிளில் கூறப்பட்டிருக்கும் வசனங்களைப் போலவே இருக்கின்றது, இரண்டும் ஒரே மூலத்திலிருந்து வந்தவை தான் என்று கூறினார். இப்பொழுது அவையிலிருந்தோர் என்ன செய்வதென்றே தெரியாது திகைத்தவர்களாக, மக்காவிற்குள் நுழையும் மக்களை எவ்வாறு இவர்கள் மந்திர வித்தை கொண்டு கட்டிப் போடுவதைப் போல கட்டிப் போடுகின்றார்களோ, அதே மாயா ஜால வித்தையை மன்னரிடமும் காட்டி விட்டார்கள் என்றே குறைஷிகள் எண்ணினார்கள்.

இப்பொழுது, மக்காவிலிருந்து வந்திருந்த குறைஷிகளின் பிரதிநிதிகளை நோக்கிய மன்னர் நஜ்ஜாஸி அவர்கள், இவர்கள் உயர் பண்புகளுக்குச் சொந்தக்காரர்களாக இருக்கின்றார்கள், இன்னும் இவர்கள் விரும்பும் காலம் வரைக்கும் இந்த அபீசீனிய மண்ணில் வாழ்ந்து கொள்ளலாம் என்று பதிலளித்தார். இன்னும் அவர்களுக்குத் தேவையான அனைத்து வித பாதுகாப்புகளும் கொடுக்கப்படும் என்றும் கூறிய அவர், எனக்கு நீங்கள் கொண்டு வந்திருக்கின்ற இந்தப் பரிசுப் பொருட்களையும் திரும்ப எடுத்துக் கொள்ளுங்கள், நீங்கள் ஒரு மலையளவு தங்கத்தைக் கொண்டு வந்து கொட்டினாலும், இந்த நேர்வழி பெற்ற மக்களை நான் உங்களது கைகளில் ஒப்படைக்க மாட்டேன் என்று கூறி குறைஷிகளைத் திருப்பி அனுப்பி விட்டார்.

மன்னரின் இந்தப் பதிலைக் கேட்ட அம்ர் இப்னுல் ஆஸ் அவர்களும், அப்துல்லா பின் அபீ ராபிஆ அவர்களும் சிறுமை அடைந்தவர்களாய், ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு, எந்த முகத்தைக் கொண்டு நாம் மக்காவுக்குத் திரும்புவது, நம்முடைய தலைவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று கேட்டுக் கொள்வது போல அவர்களது பார்வை அமைந்திருந்தது.

அனைத்து முயற்சிகளும் விழலுக்கு இரைத்த நீராய் ஆகி விட்டதே..! இன்னும் அவர்கள் முடங்கி விடவில்லை, மக்காவிற்குத் திரும்புவதற்கும் விரும்பவில்லை. மாறாக, அவர்களுக்குள் கூடி ஆலோசனை செய்து, இன்னுமொரு சதித் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தீர்மானித்தனர்.

இறுதியாக, ஒரு புதிய திட்டத்தை உருவாக்கி அம்ர் அவர்கள், இந்த திட்டத்தின்படி நாம் நடந்தால் உண்மையிலேயே நஜ்ஜாஸி கண்டிப்பாக அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பார். இந்தத் திட்டம் நிச்சயமாக நமக்குத் தோல்வியைத் தராது என்றும் அவர் கூறினார். இதனைக் கேட்ட அப்துல்லா அது என்ன திட்டம் சொல்லுங்கள் என்று கேட்டார்.

அதாவது, முஸ்லிம்கள் ஈஸா (அலை) அவர்களை மனிதராகவும், இறைவனுடைய தூதராகவும் தான் நம்பிக்கை கொள்கின்றார்கள், ஆனால் கிறிஸ்தவர்களோ அவரை கடவுளாகக் கருதுகின்றார்கள். முஸ்லிம்களுடைய புதிய வேதமானது, இன்னும் முஸ்லிம்களின் அந்த நம்பிக்கையானது, முஸ்லிம்கள் மீது மன்னர் நஜ்ஜாஸி வைத்திருக்கக் கூடிய நம்பிக்கையைத் தகர்த்தெறியக் கூடியதாக இருக்கும். இன்னும் முஸ்லிம்கள் தரக் கூடிய பதிலால் மன்னரது அனைத்துப் பிரதானிகளும் கடுமையாகக் கொதித்தெழுவார்கள் என்றும் கூறினார்.

அடுத்த நாள் காலையில் மன்னரது அவைக்குச் சென்ற குறைஷிகளின் தூதுக் குழுவினர், நேற்றைய தினம் நாங்கள் ஒரு தகவலை உங்கள் முன் கொண்டு வரத் தவறி விட்டோம், அதாவது இந்த முஸ்லிம்கள் ஈஸா (அலை) அவர்களை இறைவனது மகனாக ஏற்றுக் கொள்வதில்லை, மாறாக, அவரை ஒரு மனிதராகவும் இன்னும் இறைவனது அடிமையாகவும் தான் கருதுகின்றார்கள். எனவே, நீங்கள் அந்த முஸ்லிம்களை மீண்டும் அழைத்து, ஈஸா (அலை) அவர்கள் மீது அவர்கள் கொண்டிருக்கக் கூடிய நம்பிக்கை என்னவென்பதைக் கேட்டறிய வேண்டும் என்ற கோரிக்கையை மன்னர் நஜ்ஜாஸி முன் வைத்தனர்.

இப்பொழுது முஸ்லிம்கள் அவைக்கு வரவழைக்கப்பட்டு, ஈஸா (அலை) அவர்கள் பற்றிய உங்களது நம்பிக்கைகள் என்ன என்று கேட்கப்பட்டது. ஜாஃபர் (ரழி) அவர்கள் சத்தியத்தை முழங்கினார்கள். எங்களது இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் ஈஸா (அலை) அவர்கள் பற்றிக் கூறும் போது, அவர் அல்லாஹ்வின் அடியாரும், அவனது திருத்தூதருமாவார்கள், இன்னும் அல்லாஹ்வினுடைய ஆவி (ரூஹ்)யினாலும், இன்னும் அவனது வார்த்தை (கலிமா) யினாலும் வந்துதித்தவராவார் என்றும், தனது பதிலை முடித்தார்.

ஜாஃபர் (ரழி) அவர்களிடமிருந்து, ஈஸா (அலை) பற்றித் தெரிவித்த அந்த முழுமையான கருத்தைச் செவிமடுத்த மன்னர் நஜ்ஜாஸி அவர்கள், தனது பாதங்களை தரையில் அடித்துக் கொண்டு, ஆச்சரியத்துடன், ''நான் எதனை உங்களிடமிருந்து கேட்டேனோ அவை அனைத்தும் சத்தியம், ஈஸா (அலை) அவர்கள் தன்னைப்பற்றி என்ன கூறியிருக்கின்றார்களோ, அதிலிருந்து நீங்கள் எதனையும் மாற்றவுமில்லை, சேர்க்கவுமில்லை, மிகச் சரியாகச் சொன்னீர்கள் என்று கூறினார்.

இப்பொழுது முஸ்லிம்களின் பக்கம் திரும்பிய மன்னர் நஜ்ஜாஸி அவர்கள், நீங்கள் எனது தேசத்தில் அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழலாம், உங்களுக்கு எந்த சிறு தொந்தரவுகளும் அணுகாது.

பின்னர் குறைஷிகளின் தூதர்களின் பக்கம் திரும்பிய மன்னர், ''இறைவனுடைய மிகப் பெரும் கருணையால், நாங்கள் எங்களுக்குத் தேவையான பதிலையும், விளக்கத்தையும் பெற்றுக் கொண்டோம்''. நீங்கள் கொண்டு வந்த பரிசுப் பொருட்களை எடுத்துக் கொண்டு, உங்கள் நாட்டுக்குத் திரும்பிச் செல்லலாம் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தார்.

மக்காவிலிருந்து சதித் திட்டத்தை நிறைவேற்றும் எண்ணத்துடன் வந்த அந்தத் தூதுக் குழுவினர், வெறுங்கையுடன் ஏமாற்றத்துடன் நாடு திரும்பினார்கள்.

அபீசீனியாவில் நடந்த இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சியை படம் பிடித்தவாறு நம்முடைய நினைவலைகளுக்கு விருந்தாக்கி வைத்திருப்பவர், அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்கள். அவர்கள் இந்த முழு வரலாற்றையும் பதிவு செய்து வைத்து, நமக்கு வரலாற்றுப் பொக்கிஷமாக விட்டுச் சென்றுள்ளார்கள்.

உம்மு ஸலமா (ரழி) அவர்கள், அபீசீனியா வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்பது பற்றியும், அங்கு அவர்கள் அனுபவித்த அமைதியான வாழ்வு பற்றியும், மன்னர் நஜ்ஜாஸி அவர்களது உயர்ந்த பண்புகள், குணநலன்கள் பற்றியும் விவரித்திருந்தாலும், தமது சொந்த மண்ணைப் பிரிந்து வாழ்ந்த அவர்களது மனங்களில் மக்காவைப் பற்றி நினைவுகள் அடிக்கடி வந்து போய் அவர்களை நோய் பிடித்தவர்கள் போல வாட்டியது. அதுவே ஒரு மனநோயாகவும் மாறியது.

எப்பொழுது மக்காவில் அமைதி திரும்பும், எப்பொழுது நாம் நமது சொந்த மண்ணை மிதிப்போம் என்றே அவர்கள் ஒவ்வொரு நிமிடமும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஒருநாள், உமர் (ரழி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டார்கள், இப்பொழுது மக்காவின் நிலைமை முற்றிலும் மாற்றம் பெற்று விட்டது என்ற செய்தியைக் கேள்விப்பட்டார்கள். உமர்(ரழி) அவர்கள் இஸ்லாத்தினைத் தழுவியதன் காரணமாக, அவர்களது தலையீட்டின் காரணமாக மக்காவில் முஸ்லிம்களுக்கு எதிரான கொடுமைகள் குறைந்திருப்பதாகவும் தகவல் கிடைத்தது. இந்தச் செய்தியைக் கேட்ட அபீசீனியாவில் இருந்த முஸ்லிம்கள் மிகவும் சந்தோசமடைந்தார்கள். இன்னும் தங்களது நாட்டிற்குத் திரும்பவும் முடிவெடுத்தார்கள். அவர்களுடன் உதுமான் பின் அஃப்பான் (ரழி) அவர்களும் தனது குடும்பத்துடன் மக்காவுக்கு திரும்பத் தீர்மானித்தார்கள். ஆனால் அவர்கள் மக்காவை அடைந்த போது தான், இது வெறும் புரளி என்பதையும், மக்காவில் எந்த மாற்றமும் உண்டாகவில்லை, கொடுமைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதையும் அறிந்து கொண்டார்கள். ஆனால் அவர்கள் அறிந்து கொண்ட செய்தி அவர்களுக்கு எந்தப் பலனும் அளிக்கவில்லை.

ஒரு நபிமொழி அறிவிப்பின்படி, கீழ்க்கண்ட சம்பவத்தின் பின்னணி தான் அபீசீனியாவிலிருந்து மக்காவிற்கு அவர்களைத் திரும்பத் தூண்டியது. ஒருமுறை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் குர்ஆனிலிருந்து சில வசனங்களை ஓதிக் கொண்டிருந்த பொழுது, அதனைக் கேட்டுக் கொண்டிருந்த இறைநிராகரிப்பாளர்கள் அனைவரும் தங்களையறியாமலேயே, நிலத்தில் சிரம் தாழ்த்தினார் (சுஜுது செய்தார்)கள். இந்தச் சம்பவம் தான் பெரிதாக்கப்பட்டு, புரளியாக அபீசீனியாவிற்குச் சென்று, குறைஷிகள் அனைவரும் இஸ்லாத்தைத் தழுவி விட்டார்கள் என்ற செய்தியாகப் போய்ச் சேர்ந்தது. இந்தச் செய்தியை உண்மை என நம்பித்தான் அவர்கள் நாடு திரும்பினார்கள்.

முஸ்லிம்களுக்கெதிரான குறைஷிகளின் கொடுமைகள் குறையவில்லையாதலால், முஸ்லிம்கள் மீண்டும் அபிசீனியாவிற்கு ஹிஜ்ரத் செய்ய முடிவெடுத்தனர். அதேகால கட்டத்தில் முஸ்லிம்கள் அபிசீனியாவிற்கு ஹிஜ்ரத் செய்வதை நிறுத்தி விட்டு, மதீனாவிற்குச் செல்லுமாறு பணித்தார்கள். அகபாவில் உடன்படிக்கை எடுத்துக் கொண்ட மதீனத்து முஸ்லிம்கள், இப்பொழுது மக்காவில் உள்ள முஸ்லிம்களை ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு வருமாறு அழைத்தார்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களும் அவர்களது அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு, அபீசீனியாவை விடுத்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து செல்லுமாறு பணித்தார்கள். இன்னும் ஹிஜ்ரத் (இடம் பெயர்ந்து) வருகின்ற முஸ்லிம்களை தங்களது சொந்த சகோதரர்கள் போல கவனித்துக் கொள்வதாகவும் அன்ஸார்கள் (மதீனத்து முஸ்லிம்கள்) வாக்குறுதி அளித்தார்கள்.

அபூ ஸலமா (ரழி) குடும்பத்தினரின் ஹிஜ்ரத்

அபூ ஸலமா (ரழி) அவர்கள் தனது குடும்பத்தாருடன் மக்காவை விட்டு மதீனாவிற்கு ஒட்டகத்தில் ஏறி பயணமாகத் தொடங்கினார். இதனை அறிந்த உம்மு ஸலமா (ரழி) அவர்களது குடும்பத்தார் ஓட்டகத்தை மறித்து, ஒட்டகத்தின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு,

அபூ ஸலமாவே..! நீங்கள் எங்கு விரும்புகின்றீர்களோ.. அங்கு நீங்கள் போய்க் கொள்வதில் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை, ஆனால் உங்கள் மனைவியோ எங்களைச் சேர்ந்தவள், எனவே, அவரை நீங்கள் விட்டு விட்டுத் தான் போக வேண்டும்.

நேற்றைக்கு அபிசீனியாவிற்கு கூட்டிக் கொண்டு போனீர்..! இன்றைக்கு மதீனாவிற்குக் கூட்டிக் கொண்டு போகின்றீர், அவளை வைத்து நிம்மதியாக குடும்பம் நடத்தத் தெரியாத உமக்கு எதற்கு மனைவி என்று அவர்கள் ஏளனமாகச் சிரித்தார்கள்.

உம்மு ஸலமா (ரழி) அவர்களது குடும்பத்தினர் நடந்து கொண்ட விதத்தைக் கேள்விப்பட்ட அபூ ஸலமா குடும்பத்தினர் உம்மு ஸலமா (ரழி) அவர்களிடம் வந்து, நீ பெற்றிருக்கின்ற பிள்ளைகள் எங்களது இரத்த வழி வாரிசுகள், அதனை உன்னுடைய வளர்ப்பில் நாங்கள் விட முடியாது, அவர்கள் எங்களது இரத்தமும், சதையும் ஆவார்கள், எனவே அவர்களை நாங்கள் எடுத்துச் சென்று வளர்த்துக் கொள்கின்றோம் என்று கூறி, பிள்ளைகளைத் தங்களுடன் அழைத்துச் சென்று விட்டார்கள்.

சற்று முன் மதீனாவை நோக்கிய பயணத்தில் இருந்து கொண்டிருந்த ஒட்டு மொத்த குடும்பமும் இப்பொழுது, தனித்தனியாக மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டு விட்டது. இவையெல்லாம் நடந்து கொண்டிருந்த பொழுது, அபூ ஸலமா (ரழி) அவர்கள் தனது மனைவியை விட்டு விட்டு தன்னந்தனியாக மதீனாவை நோக்கிய தனது பயணத்தைத் தொடர்ந்தார், உம்மு ஸலமா (ரழி) அவர்களை அவர்களது உறவுக்காரர்கள் அழைத்துச் சென்று விட்டார்கள், உம்மு ஸலமாவின் பிள்ளைகளை அபூ ஸலமா (ரழி) அவர்களின் குடும்பத்தவர்கள் அழைத்துச் சென்று விட்டார்கள்.

ஆக, மொத்த குடும்பமே இப்பொழுது முற்றிலும் பிரிந்து போய் நிற்க, நடப்பது அத்தனையும் நிஜமா..! என்று கண் கலங்கிய உம்மு ஸலமா (ரழி) அவர்கள், பிரிவுத் துயரால் வாடி நின்றார்கள். ஒவ்வொரு நாளும் தனது கணவரையும், பிள்ளைகளையும் பிரிந்த அந்த இடத்திற்கு வந்து அந்த சோக நினைவுகளில், தன்னை இழந்து அழுது கொண்டிருந்தார்கள்.

ஒருநாள் அந்த வழியே போய்க் கொண்டிருந்த உம்மு ஸலமா (ரழி) அவர்களின் கோத்திரத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், உம்மு ஸலமா (ரழி) அவர்கள் அந்த இடத்தில் அமர்ந்து அழுது கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு, உம்மு ஸலமாவே..! உமக்கு என்ன நேர்ந்தது, ஏன் இப்படி அழுது கொண்டிருக்கின்றாய்? என்று கேட்டார். நடந்த அந்தத் துயர நிகழ்வுகளை அவரிடம் சொன்னார். அந்த மனிதர் உம்மு ஸலமா (ரழி) மற்றும் அபூ ஸலமா (ரழி) ஆகியோர்களின் உறவினர்களிடம் போய், இந்த பெண்ணை ஏன் நீங்கள் இப்படி சித்தரவதை செய்கின்றீர்கள். நீங்கள் இந்தப் பெண்ணை இப்படி குழந்தைகளைப் பிரித்து வைத்து அழகு பார்ப்பது முறையா? என்று அவர்களது தவறை தெளிவான முறையில் எடுத்துச் சொன்னதன் பின்பு, அவர்கள் தங்களது தவறை உணர்ந்து, குழந்தைகளை திருப்பிக் கொண்டு வந்து உம்மு ஸலமா (ரழி) அவர்களிடம் கொண்டு வந்து விட்டுச் சென்றார்கள். அத்துடன் மதீனாவுக்குச் செல்வதற்கும் அவர்கள் அனுமதி தந்தார்கள்.

ஆனால் எப்படி அவரால் தன்னந்தனியாக மதீனாவுக்குச் செல்ல முடியும்? அவருடன் மதீனா வருவதற்கு யாரும் தயாராக இல்லை. இறுதியாக, தைரியத்தை வரவழைத்துக் கொண்ட உம்மு ஸலமா (ரழி) அவர்கள் தன்னந்தனியாகவே தனது பிள்ளைகளுடன் ஒட்டகத்தில் தனது பயணத்தைத் தொடர்ந்தார்கள். தன்ஈம் என்ற இடத்திற்கு அருகே செல்லும் போது, அந்த வழியே வந்து கொண்டிருந்த உதுமான் பின் தல்ஹா அவர்களை உம்மு ஸலமா (ரழி) அவர்கள் சந்தித்தார்கள். இந்த உதுமான் பின் தல்ஹா அவர்கள் அப்பொழுது இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை.

உம்மு ஸலமா (ரழி) அவர்களைப் பார்த்த உதுமான் பின் தல்ஹா அவர்கள், உம்மு ஸலமா அவர்களே..! தன்னந்தனியாக நீங்கள் எங்கே போய்க் கொண்டிருக்கின்றீர்கள் என்று கேட்டார். உம்முடன் வருவதற்கு உமது குடும்பத்தில் எவருமா கிடைக்கவில்லை? என்று வினா எழுப்பிய அவருக்கு, நான் எனது இறைவனை முழுமையாகச் சார்ந்து இந்தப் பயணத்தைத் துவங்கினேன், அவனே எனது பாதுகாவலன், அவனே எதிரிகளிடமிருந்து என்னைச் சூழ்ந்து காக்கிறவன், அவனால் மட்டுமே என்னைப் பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கையில் நான் பயணத்தைத் தொடங்கிவிட்டேன் என்று கூறினார்.


உதுமான் பின் தல்ஹா அவர்கள் உம்மு ஸலமா (ரழி) அவர்களுக்கு துணைக்காக மதீனா வரை வரச் சம்மதித்தவராக, ஒட்டகத்தின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்.

உம்மு ஸலமா (ரழி) அவர்கள் உதுமான் பின் தல்ஹா அவர்களது இந்த உதவியைப் பின்னாளில் இவ்வாறு நினைவு கூரக் கூடியவராக இருந்தார். அந்த அறியாமைக்காலத்திலும் இப்படியும் ஒரு மனிதரா! இவரைப் போல நல்ல எண்ணம் கொண்ட மனிதரை நான் பார்த்ததே இல்லை, அவர் எனக்கு எந்தக் கெடுதலும் நினைக்கவில்லை, எந்த தொந்தரவும் செய்யவில்லை. எப்பொழுதெல்லாம் ஓய்வெடுக்க ஒட்டகத்தை நிறுத்தினாலும், ஒட்டகத்தைக் கட்டிப் போட்டு விட்டு, அவர் எங்களை விட்டு தூரப் போய் விடுவார். அதன் மூலம் எனக்கு அவர் சங்கோஜமும், சங்கடமும் ஏற்படுவதிலிருந்து என்னைப் பாதுகாத்தார். பின்பு பயணத்தைத் துவங்கும் போது, நானும் எனது பிள்ளைகளும் ஒட்டகத்தில் ஏறி உட்காரும் வரைக்கும் தூர நின்று கொண்டு விட்டு, நாங்கள் ஏறி முடித்ததும், ஒட்டகத்தின் மூக்கணாங்கயிறைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்து விடுவார்.

சில நாட்கள் கழித்து மதீனாவின் வெளிப்புறப் பகுதியில் அமைந்த இடமான கூபாவிற்கு உம்மு ஸலமா (ரழி) அவர்கள் வந்து சேர்ந்தார்கள். அங்கு பனூ அம்ர் பின் அவ்ஃப் கோத்திரத்தார்கள் அந்த இடத்தில் தான் குடியிருந்தார்கள். எனவே, அபூ ஸலமா (ரழி) அவர்களும் கூட இங்கு தான் இருக்க வேண்டும், நீங்கள் அவருடன் போய்ச் சேர்ந்து கொள்ளுங்கள் நான் திரும்பிப் போகின்றேன் என்று கூறி உதுமான் பின் தல்ஹா அவர்கள் திரும்பிப் போய் விட்டார்கள்.

உதுமான் பின் தல்ஹா அவர்கள் செய்த, இந்த காலம் அறிந்து செய்த உதவியானது மறக்கக் கூடியதல்ல, அவரது நற்பண்பு என்னை மிகவும் பாதித்து விட்டது என்று கூறுக் கூடியவர்களாக உம்மு ஸலமா (ரழி) அவர்கள் இருந்தார்கள்.

இறுதியாக, உம்மு ஸலமா (ரழி) அவர்கள் தனது கணவருடன் சேர்ந்து கொண்டார்கள், அளவில்லா சந்தோஷமடைந்தார்கள். இப்பொழுது உடைந்து சிதறிப் போன அபூ ஸலமா (ரழி) அவர்களின் குடும்பத்தவர்கள் மீண்டும் ஒன்றிணைந்தார்கள், குழந்தைகளும் தங்களது பெற்றோர்களின் கண்காணிப்பில் சந்தோஷமடைந்தார்கள்.

அபூ ஸலமா (ரழி) ஏற்கனவே பத்ருப் போரில் கலந்து கொண்டு, சிறப்புப் பெற்றிருந்தார்கள், அதனைப் போலவே உஹதுப் போரிலும் கலந்து கொண்ட சிறப்புக்குரியவராகத் திகழ்ந்தார். உஹதுப்; போரில் அபூ உஸமா ஜஸ்மி என்பவர் எறிந்த கத்தி ஒன்று மிக ஆழமான காயத்தை அபூ ஸலமா (ரழி) அவர்களுக்கு ஏற்படுத்தியது, அதன் மூலம் அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டார்கள். மாதக் கணக்கில் அதற்கான மருத்துவம் செய்தும் பலனளிக்கவில்லை. மேற்புறத்தில் ஆறிய புண், உள்பகுதியில் சீழ் வைத்து அதிக ரணத்தைத் தந்து கொண்டிருந்தது.

உஹதுப் போர் முடிந்து சற்று இரண்டு மாதங்கள் இருந்த நிலையில், பனூ அஸத் குலத்தவர்கள் முஸ்லிம்களைத் தாக்குவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், பனூ அஸத் குலத்தவர்களை எதிராகப் போர் செய்வதற்குத் தயாராகும்படியும், அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படியும், தனது தோழர்களுக்குக் கட்டளையிட்டார்கள். பனூ அஸத் குலத்தவர்களுக்கு எதிராகப் புறப்பட்ட படைக்குத் தலைமைத் தளபதியாக அபூ ஸலமா (ரழி) அவர்களைத் தான், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நியமித்தார்கள். இந்தப் படையில் மிகப் பெரும் படைத்தளபதிகளாக விளங்கிய அபூ உபைதா அல் ஜர்ராஹ் (ரழி) மற்றும் சஅத் பின் அபீவக்காஸ் (ரழி) போன்ற மிகச் சிறப்புப் பெற்ற தளபதிகளும் இடம் பெற்றிருந்தார்கள்.

அபூ ஸலமா (ரழி) அவர்களிடம் இஸ்லாமியக் கொடியைக் கொடுத்து விட்டு, போர் உத்திகளை எவ்வாறு வகுத்துச் செயல்பட வேண்டும் என்பதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விளக்கினார்கள்.

பனூ அஸத் குலத்தவர்கள் வசிக்கக் கூடிய பகுதியின் எல்லைக் கோட்டுக்கருகே நமது படைகளை நிறுத்துங்கள். அவர்கள் வந்து தாக்குதவற்கு முன்பாக நீங்கள் அவர்களை தாக்க ஆரம்பித்து விடுங்கள். அவர்களுக்கு சந்தர்ப்பம் அளித்து விடாதீர்கள் என்று கட்டளையிட்டார்கள்.

இப்பொழுது, அபூ ஸலமா (ரழி) அவர்களது தலைமையில் 150 பேர் கொண்ட இஸ்லாமியப் படை கிளம்பியது. பனூ அஸத் குலத்தவர்களது எல்லைக் கோட்டுக்கருகே வந்த இஸ்லாமியப் படை சற்றும் தாமதிக்காது தங்களது தாக்குதலைத் தொடுத்தார்கள். உஹதுப் போரின் வெற்றிக்குப் பின், நடந்த இப்போரில் முஸ்லிம்கள் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற நிலை இருந்தது. ஏனெனில் சுற்றி உள்ள யூத மற்றும் எதிரிகளுக்கு இதன் மூலம் சிறந்த பாடத்தையும், முஸ்லிம்களைப் பற்றிய அச்ச உணர்வையும் ஊட்ட வேண்டிய அவசியம் முஸ்லிம்களுக்கு இருந்த காரணத்தால், தங்களது முழு பலத்தையும் பிரயோகித்து, வெற்றி அல்லது வீர மரணம் என்ற உயர்ந்த நோக்கத்தில் போரை, வெற்றியை நோக்கிக் கொண்டு சென்ற முஸ்லிம்கள், இறுதியில் பனூ அஸத் கோத்திரத்தாரை வேரறுத்து வெற்றி வாகை சூடினார்கள்.

இந்தப் போரில் தனக்கு ஏற்பட்ட காயத்தையும் மறந்து தன் மீது சுமத்தப்பட்ட பொறுப்புக்காகவும், இறைத்திருப்தியைப் பெற்றுக் கொள்ளும் வகையிலும் அபூ ஸலமா (ரழி) அவர்கள் போரிட்டார்கள். அவர்களது வாள் அனைத்துப் பக்கமும் சுழன்று, எதிரிகளை நிலைகுலைய வைத்தது. இறுதியில், முஸ்லிம்களின் வீரத்திற்கு முன்னால் மண்டியிட்டு, தோற்று ஓடினார்கள் பனூ அஸத் குலத்தவர்கள்.

இப்பொழுது ஏற்கனவே காயம் பட்ட இடத்தில் இருந்து ரணம், வலியாக மாறி, அந்த இடத்தில் இரத்தம் ஒழுக ஆரம்பித்தது. முஸ்லிம்கள் வெற்றி பெற்று விட்டார்கள். அதிகமான கனீமத் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. மதீனாவை விட்டுக் கிளம்பி 29 நாட்கள் கழித்து மீண்டும் ஹிஜ்ரி 4 ஆம் ஆண்டு ஸஃபர் மாதம் 8 ம் தேதியன்று முஸ்லிம்கள் மீண்டும் மதீனாவிற்குள் நுழைந்தார்கள்.

அபூ ஸலமா (ரழி) அவர்களின் காயத்தைப் பார்த்த உம்மு ஸலமா (ரழி) மிகுந்த மன வேதனை அடைந்தார்கள்.

அபூ ஸலமா (ரழி) மரணம்

அபூ ஸலமா (ரழி) அவர்கள் மிகவும் கவலைக்கிடமான நிலையில் படுக்கையில் கிடக்கும் பொழுது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அபூ ஸலமாவைப் பார்க்க வீட்டிற்கு வந்தார்கள். அபூ ஸலமா (ரழி) அவர்களுக்கு மரணம் நெருங்கி விட்டது என்பதை உணர்ந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அபூ ஸலமா (ரழி) அவர்களின் மீது கையை வைத்து, அவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அபூ ஸலமா (ரழி) அவர்களுக்காகப் பிரார்த்தித்தார்கள், இன்னும் அபூ ஸலமா (ரழி) அவர்களும் இறைவனிடம் பிரார்தித்தார்கள், இறைவா! என்னைப் போலவே என்னுடைய குடும்பத்தை பாதுகாத்துக் கவனித்துக் கொள்கின்ற ஒருவரை, துணைவராக ஆக்கி வைப்பாயாக! என்று பிரார்த்தித்தார்கள். இன்னும் உம்மு ஸலமா (ரழி) அவர்களுக்கு கவலையையும், கடினமான வாழ்வையும் தராத ஒருவரை அவருக்கு துணைவராக ஆக்கி வைப்பாயாக..! என்றும் தனது மனைவிக்காகப் பிரார்த்தித்தார்கள்.

இந்தப் பிரார்த்தனைக்குப் பின்பு, அபூ ஸலமா (ரழி) அவர்களை மரணம் வந்தடைந்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது கரங்களால் அபூ ஸலமா (ரழி) அவர்களின் கண்களை மூடினார்கள். அபூ ஸலமா (ரழி) அவர்கள் தனக்காகப் பிரார்த்தித்ததை அறிந்த உம்மு ஸலமா (ரழி) அவர்கள், அபூ ஸலமாவை விட மிகச் சிறந்த கணவர் யார்? என்று ஆச்சரியப்பட்டார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! நான் எனக்காக இறைவனிடம் என்ன கேட்க வேண்டும் என்பதை எனக்குக் கற்றுத் தாருங்கள் என்று உம்மு ஸலமா (ரழி) அவர்கள் கேட்டார்கள்.

நீங்கள் உங்களுடைய மற்றும் அபூ ஸலமா (ரழி) அவர்களுடைய பாவ மன்னிப்பிற்காக இறைவனிடம் துஆச் செய்து கொள்ளுங்கள், உங்களுக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கித் தரும்படி இறைவனிடம் முறையீடு செய்து கொள்ளுங்கள் என்ற பிரார்த்தனையை இறைத்தூதர் (ஸல்) அவர்கள், உம்மு ஸலமா (ரழி) அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.

உம்மு ஸலமா (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள் :

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தவாறு நான் பிரார்த்தித்தேன், இறைவன் என்னுடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான். கணவர் இறந்ததன் பின்பு முஸ்லிம் பெண்கள் அனுஷ்டிக்கக் கூடிய அந்த இத்தா என்ற காத்திருப்புக் காலம் முடிவடைந்தது.

இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் திருமணம்

இப்பொழுது இறைவன் உம்மு ஸலமா (ரழி) அவர்களின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டதற்கிணங்க, முதலில் அபுபக்கர் (ரழி) அவர்கள் உம்மு ஸலமா (ரழி) அவர்களிடம் ஒரு தூதுவரை அனுப்பி, அவர்களை மணந்து கொள்ளத் தயாராகக் இருப்பதாகக் கூறுகின்றார்கள். ஆனால் உம்மு ஸலமா (ரழி) அவர்கள் அபுபக்கர் (ரழி) அவர்களை மணந்து கொள்ள மறுத்து விடுகின்றார்கள்.

பின்பு உமர் (ரழி) அவர்கள் மணந்து கொள்ளத் தயாராக இருந்தும், அதனையும் மறுத்து விடுகின்றார்கள்.

பின்பு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தான் மணக்கத் தயாராக இருப்பதாகச் செய்தி சொல்லி அனுப்பி விடுகின்றார்கள்.

இப்பொழுது உம்மு ஸலமா (ரழி) அவர்களை மணந்து கொள்ள மூன்று நபர்கள் காத்திருக்கின்றார்கள். தலை வெடித்து விடும் அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது உம்மு ஸலமா (ரழி) அவர்களுக்கு..! அதற்குக் காரணமும் இருந்தது.

முதலாவதாக, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வேண்டுகோளை நான் உதாசிணம் செய்தால், நான் செய்து வைத்திருக்கின்ற நற்செயல்கள் அழியக் காரணமாகி விடுமே..!

இரண்டாவதாக, நானோ வயதான பெண்.

மூன்றாவதாக, எனக்கோ அதிகமான பிள்ளைகள் இருக்கின்றார்கள்.

இந்த நிலையில் நான் எந்த முடிவை எடுப்பது என்று திணறிக் கொண்டிருந்த உம்மு ஸலமா (ரழி) அவர்களுக்கு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு ஆலோசனை கூறினார்கள்.

உம்மு ஸலமா (ரழி) அவர்களே..! நீங்கள் அவசரப்பட வேண்டாம். இறைவனிடம் முறையிட்டு, இதற்கு சரியான தீர்வை வழங்குமாறு அவனிடமே உதவி கோருங்கள், நானும் உங்களுக்காக துஆச் செய்கின்றேன் என்று கூறி அவர்களது மன உலைச்சலுக்கு தீர்வு சொன்னார்கள்.

இன்னும் உம்மு ஸலமா (ரழி) அவர்களுக்கு இறைத்தூதர் (ஸல்) இவ்வாறு பதில் கூறினார்கள். நீங்கள் வயதான பெண்மணி என்றால் நானும் வயதானவன் தான், பிள்ளைகளைப் பொறுத்தவரை நீங்கள் கவலைப்பட வேண்டாம், அவர்களுக்கு நான் பாதுகாவலனாக இருந்து அவர்களுக்குத் தேவையானவற்றை செய்து கொடுக்கவும் பொறுப்பேற்றுக் கொள்கின்றேன் என்று வாக்குறுதியளித்தார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இந்த பதிலால், மனம் மகிழ்ந்த உம்மு ஸலமா (ரழி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களை மணக்கச் சம்மதித்தார்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களுடைய குடும்பத்தார்களுடன் இணைவதை மிகப் பெரும் பாக்கியமாகக் கருதினார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களை மணந்து கொண்டதன் மூலம் அபூ ஸலமா (ரழி) அவர்கள் தனது மனைவிக்குச் செய்த பிரார்த்தனைகள் நிறைவேறியது. ஹிஜ்ரி 4 ஆம் ஆண்டு, ஷவ்வால் மாதம் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கும், உம்மு ஸலமா (ரழி) அவர்களுக்கும் திருமணம் நடந்தது.

அன்னையின் சிறப்புக்கள்

அன்னை ஆயிஷா (ரழி) அவர்களின் அறிவிப்பின்படி, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு நாளின் அஸர் தொழுகையின் பின்பு தனது மனைவிமார்களின் வீட்டிற்குச் சென்று, அவர்களின் நலம் மற்றும் தேவைகள் குறித்து விசாரித்து வரக் கூடியவர்களாக இருந்தார்கள். அவ்வாறு அவர்கள் மனைவிமார்களின் வீடுகளுக்குப் புறப்படும் பொழுது, எங்களில் மூத்தவரான உம்மு ஸலமா (ரழி) அவர்ளின் வீட்டிலிருந்து ஆரம்பித்து, இறுதியில் எனது (ஆயிஷா (ரழி)) வீட்டோடு முடித்துக் கொள்வார்கள்.

அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்களின் அழகு, கல்வி மற்றும் ஞானத்தின் காரணமாக இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மனைவிமார்களில் சிறந்த இடத்தினை வகித்தார்கள்.

ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின்பு, தங்களுடன் கொண்டு வந்திருக்கும் பலிப் பிராணிகளைக் அறுத்துப் பலியிட்டு விட்டு, தங்களது தலைமுடியை சிரைத்துக் கொள்ளும்படி தனது தோழர்களுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கட்டளையை உடனே செயல்படுத்துவதில் தோழர்கள் சற்று ஆர்வங்குன்றி இருந்தார்கள் என்பதோடு, யாரும் பலிப்பிராணிகளை அறுக்காமல் தாமதித்துக் கொண்டிருந்தார்கள்.

நிலைமையைப் புரிந்து கொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்களிடம் இந்தப் பிரச்னையை எவ்வாறு தீர்ப்பது என்று ஆலோசனை கலந்த பொழுது அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்கள் கூறினார்கள்,

நீங்கள் யாரிடமும் எதுவும் பேச வேண்டாம். முதலில் நீங்கள் சென்று உங்களது பலிப்பிராணிகளை நீங்கள் அறுத்துப் பலியிடுங்கள். நீங்கள் அதனைச் செய்த பின்பு, உங்களது தோழர்கள் உங்களுக்குக் கட்டுபட வேண்டியது அவசியமாகி விடும் பொழுது, அவர்கள் தானாகவே வந்து அவரவர் பலிப்பிராணிகளை அறுத்துப் பலியிட்டு விட்டு, முடிகளை சிரைத்துக் கொள்ள ஆரம்பித்து விடுவார்கள் என்று ஆலோசனை கூறினார்கள்.

அதன்படியே நடந்து கொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்கள் கொடுத்த ஆலோசனை நன்கு வேலை செய்வதைப் பார்த்தார்கள். தனது தோழர்களும் இப்பொழுது தங்கள் பலிப்பிராணிகளை அறுத்துப் பலியிட ஆரம்பித்து விட்டதுடன், அந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்தது.

அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். இன்னும் அவர்கள் கல்வியறிவு பெற்றிருந்ததுடன், ஏழைகளுக்கும் இன்னும் தேவையுடையவர்களுக்கும் உதவி செய்யக் கூடியவர்களாகவும் இருந்தார்கள்.

அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்களின் வீட்டில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இருந்த காலங்களில் பல முறை திருமறையின் வசனங்கள் அருள் செய்யப்பட்டிருக்கின்றன. சூரா அஹ்ஸாப் ன் இந்த வசனங்கள் அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்களின் வீட்டில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இருந்த காலத்தில் தான் அருள் செய்யப்பட்டது.

(நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்;. முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; (நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான
். (33:33)

இன்னும் சூரா அத் தவ்பா வின் பல வசனங்கள் அன்னையவர்களின் இல்லத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இருந்த காலத்தில் தான் அருள் செய்யப்பட்டது.

வேறு சிலர் தம் குற்றங்களை ஒப்புக்கொள்கின்றனர்; ஆனால் அவர்கள் (அறியாது நல்ல) ஸாலிஹான காரியத்தைக் கெட்ட காரியத்துடன் சேர்த்து விடுகிறார்கள். ஒரு வேளை அல்லாஹ் அவர்களின் (தவ்பாவை ஏற்று) மன்னிக்கப் போதும், நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், பெருங் கிருபையாளனாகவும் இருக்கின்றான்
. (9:102)

இன்னும் இந்த வசனமும்,

(அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்து) விட்டு வைக்கப்பட்டிருந்த மூவரையும், (அல்லாஹ் மன்னித்து விட்டான்;) பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும், அது அவர்களுக்கு நெருக்கமாகி அவர்கள் உயிர் வாழ்வதும் கஷ்டமாகி விட்டது - அல்லாஹ்(வின் புகழ்) அன்றி அவனைவிட்டுத் தப்புமிடம் வேறு அவர்களுக்கு இல்லையென்பதையும் அவர்கள் உணர்ந்து கொண்டார்கள் - ஆகவே, அவர்கள் பாவத்திலிருந்து விலகிக் கொள்ளும் பொருட்டு, அவர்களை அல்லாஹ் மன்னித்தான்; நிச்சயமாக அல்லாஹ் (தவ்பாவை ஏற்று) மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான
். (9:118)

மேலே உள்ள இறைவசனங்கள், கஅப் இப்னு மாலிக் (ரழி), ஹிலால் பின் உமைய்யா (ரழி), மராரா பின் அர்ராபிஆ (ரழி) ஆகியோர்கள், இறைவனிடம் தவ்பா (பாவ மன்னிப்பு) செய்து கொண்டதன் பின்பு, அதன் பலனாக அவர்களை மன்னித்து மேற்கண்ட வசனத்தை இறக்கியருளினான். மேலே உள்ள மூன்று தோழர்களும், எந்தவித நியாயமான காரணமுமின்றி தபூக் யுத்தத்திற்குச் செல்லாமல் மதினாவிலேயே தங்கி விட்டார்கள். எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உத்தரவுப்படி, இந்த மூன்று நபர்களுடன் யாரும் எந்தவித உறவும், கொடுக்கல் வாங்கல், பேச்சு வார்த்தை எதுவும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று மதீனத்து முஸ்லிம்களுக்கு உத்தரவிட்டார்கள். இந்த உத்தரவால் மிகவும் பாதிக்கப்பட்ட இந்த மூன்று பேரும், இறைவனிடம் மன்றாடி முறையிட்டு பாவ மன்னிப்புத் தேடியதன் பின்பு, இறைவன் இந்த மூன்று பேர்களையும் மன்னித்துத் தான் மேற்கண்ட வசனத்தை இறக்கியருளினான்.

அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்களது இல்லத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த பொழுது தான், மேற்கண்ட வசனம் அருள் செய்யப்பட்டது. இரவின் இறுதிப் பகுதியில் தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அந்த மூன்று நபர்களின் பாவ மன்னிப்பை இறைவன் ஏற்றுக் கொண்டான் என்று அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்களிடம் கூறினார்கள்.

இதனைக் கேட்ட அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! இந்த நற்செய்தியை அவர்களிடம் தெரிவிக்கச் சொல்வோமா? என்று கேட்டார்கள். இந்த அகால நேரத்தில் அவர்களைத் தொந்திரவு செய்ய வேண்டாம். காலை பஜ்ருத் தொழுகைக்குப் பின்பு யாரிடமாவது சொல்லி அனுப்பி, அவர்களுக்கு வாழ்த்துச் சொல்வோம் என்று கூறினார்கள். இந்த செய்தியைக் கேட்ட அந்த மூன்று பேரும் மகிழ்ச்சி அடைந்தார்கள், இன்னும் அனைத்து நபித்தோழர்களும் சந்தோஷமடைந்தார்கள்.

இன்னும் அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் பல போர்களுக்குச் சென்றுள்ளார்கள். பனீ முஸ்தலக் போர், தாயிஃப் போர், கைபர், ஹுனைன் மற்றும் மக்கா வெற்றியின் பொழுதும் அன்னையவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தார்கள். இன்னும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஹுதைபிய்யா உடன்படிக்கையின் பொழுதும் அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தார்கள். இன்னும் பைத்அத்தும் செய்து கொண்டார்கள்.

சல்மான் அல் ஃபார்ஸி (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஒருமுறை ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் உரையாடுவதற்காக வந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த சமயத்தில் நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடைய வீட்டிற்குச் சென்றிருந்தேன். அங்கு தஹிய்யா கல்பி (ரழி) என்ற தோழரும், இன்னும் அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்களும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் அங்கிருந்தார்கள். பேசி முடித்த பின், சற்று முன் உரையாடி விட்டுச் சென்ற நபர் யார் என்று தெரியுமாக இருந்தால் கூறுங்கள் என்று கூறினார்கள்.

அவர் உங்களது மதிப்பிற்குரிய தோழர் தஹிய்யா கல்பி (ரழி) அவர்கள் என்று அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்கள் கூறினார்கள். அதன் பின், இல்லை..! வந்தவர் ஜிப்ரீல் (அலை) அவர்களாவார்கள், அவர் தஹிய்யா கல்பி (ரழி) அவர்களுடைய உருவத்தில் வந்திருந்தார்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்கள் மார்க்க விசயங்களில் நல்ல கல்வி ஞானம் பெற்றவராகத் திகழ்ந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நபிமொழிகளில் 387 நபிமொழிகளை மனனமிட்டு வைத்திருந்தார்கள். இஸ்லாமிய சட்டங்களில் உறவு முறைகள் குறித்தும், தத்தெடுத்தல் மற்றும் மணவிலக்கு குறித்தும் நுணுக்கமான சட்டங்களை அறிந்து வைத்திருந்தார்கள். இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களில் தனக்கு ஏற்படும் சந்தேகங்களை அப்துல்லா பின் அப்பாஸ் (ரழி) அவர்கள் அன்னையிடம் வந்து கலந்தாலோசனை செய்து விளக்கம் பெற்றுக் கொள்வார்கள்.

இஸ்லாமியச் சட்ட வழங்கல்களில் மற்றும் தீர்ப்பு வழங்குவதில் தனிச்சிறப்புப் பெற்ற நபித்தோழர்கள் பலர் அன்னையின் பெயரால் பல மார்க்கத் தீர்ப்புகளை வழங்கியுள்ளார்கள். அன்னையின் பெயரால் அறிவிக்கப்படும் பல சட்டத்தீர்ப்புகளைக் கொண்டு, அந்தத் தீர்ப்புகள் செல்லத்தக்கவை என்று அவர்கள் சான்று பகர்ந்திருக்கின்றார்கள்.

நீதித்துறையில் தீர்ப்பு வழங்கும் தகுதி பெற்ற நபித்தோழர்களின் பட்டியலில் அன்னையவர்களும் இடம் பெற்றிருந்தார்கள். அவர்களாவன :

1. உம்மு ஸலமா (ரழி)

2. அனஸ் பின் மாலிக் (ரழி)

3. அபூ ஸயீத் அல் குத்ரீ(ரழி)

4. அபூ ஹுரைரா (ரழி)

5. உதுமான் பின் அஃப்பான் (ரழி)

6. அப்துல்லா பின் அம்ர் பின் ஆஸ் (ரழி)

7. அப்துல்லா பின் ஜுபைர்(ரழி)

8. அபூ மூஸா அல் அஷ்அரீ (ரழி)

9. ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரழி)

10. ஸல்மான் ஃபார்ஸி(ரழி)

11. ஜாபிர் பின் அப்துல்லா(ரழி)

12. முஆத் பின் ஜபல் (ரழி)

13. அபுபக்கர் சித்தீக் (ரழி)

14. தல்ஹா பின் உபைதுல்லா(ரழி)

15. ஸுபைர் பின் அவ்வாம் (ரழி)

16. அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி)

17. இம்ரான் பின் ஹுஸைன் (ரழி)

18. உபாதா பின் ஸாமித் (ரழி)

19. முஆவியா பின் அபீ சுஃப்யான் (ரழி)

மொழித்துறையிலும் அன்னையவர்கள் சிறந்து விளங்கினார்கள். அவருக்கு நிகராக இருந்தவர்கள் மிகச் சிலரே. அவர்கள் பேசும் பொழுது தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளைக் கொண்டே பேசுவார்கள், அவர்களது கருத்துக்கள் தெளிவான உச்சரிப்புடன் வெளிப்படும். இன்னும் அவர்களது எழுத்துக்களும், நல்ல மொழிநடையைக் கொண்டதாக இருக்கும்.

அன்னையவர்கள் தனது 84 ஆம் வயதில் ஹிஜ்ரி 62 ஆம் ஆண்டு மரணமடைந்தார்கள். நேர்வழி பெற்ற கலீபாக்களின் ஆட்சியை கண்டு களிக்கும் நற்பேறு பெற்றவர்களாக இருந்தார்கள். அன்னை ஜைனப் பின்த் ஜஹ்ஸ் (ரழி) அவர்கள் அன்னையவர்களில் முதலாவது மரணமடைந்தவர்கள் என்றால், அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்கள் அன்னையர்களிலேயே இறுதியாக மரணமடைந்தார்கள். யஸீத் பின் முஆவியா அவர்களது ஆட்சியின் பொழுது தான் அன்னையவர்கள் மரணமடைந்தார்கள். அவர்களது உடல் ஜன்னத்துல் பக்கீயில் மற்ற தோழர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது.

(... அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே! நீ உன்னுடைய இறைவன் பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக. நீ உன் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக. மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்.
(89:27-30)

Wednesday, October 13, 2010

அஸ்மா பின்த் அபூபக்கர் (ரழி)


;இப்போது நாம், இஸ்லாமிய வரலாற்றில் புகழுடன் ஒளிவீசும் தாரகையாய்த் திகழ்கின்ற ஒரு மகத்தான பெண்மணியின் சரிதையைக் காணப் போகின்றோம்.

அண்ணல் நபியின் ஆருயிர்த் தோழர் அபூபக்கர் (ரழி) அவர்களின் மூத்த புதல்வியும் சுவனத்தைக் கொண்டு நற்செய்தி சொல்லப்பட்டவர்களில் ஒருவரான ஜூபைர் இப்னுல் அவ்வாம் (ரழி) அவர்களின் மனைவியும் மாபெரும் வீரத் தியாகியாய்த் திகழ்ந்த அப்துல்லாஹ் ஜூபைர் (ரழி)யின் அன்பு அன்னையுமான மரியாதைக்குரிய அஸ்மா (ரழி) அவர்களின் வரலாறுதான் அது!

இறைவனின் மீது உண்மையான - உறுதியான நம்பிக்கை கொண்ட அஸ்மா (ரழி) அவர்கள் சிறுவயது முதலே இஸ்லாத்தின் வெற்றிக்காக அரும்பெரும் பணிகளை ஆற்றும் நல்வாய்ப்பைப் பெற்றார்கள்!

ஜூபைர் (ரழி) அவர்களின் குடும்பத் தலைவியை வறுமையும் துன்பமும் வந்து வாட்டிய காலமும் உண்டு. அப்போது அவர்கள் பொருமையின் சிகரமாய் ஒளிர்ந்தார்கள். பிறகு செழிப்பும் வளவாழ்வும் வந்து மகிழ்வித்தன. அப்போது கிஞ்சிற்றும் செருக்குறாமல் குணத்தின் குன்றாய் வாழ்ந்துகாட்டி பெண்குலத்திற்கு ஒரு சிறந்த முன்மாதிரியைப் படைத்தார்கள்.

அவர்களின் வாழ்க்கை

வறுமைக்கு இலக்காகும் இல்லத்தரசிகளுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரம்! பெண்ணினத்தை இழிவுக் கண்கொண்டு பார்ப்பவர்களுக்கு - ஒரு பெண் ஆணைவிடவும் அதிக அறிவு பெற்றவளாக, சிறந்தவளாக திகழ முடியும் எனும் உண்மையின் நிரூபணம்!

பெண் என்றால் ஓர் இன்பப் பொருளாகவே இருக்க வேண்டும், வெளியலங்காரத்தையும் பகட்டையும் தவிர வேறெந்த நன்மையோ குறிக்கோளோ அவளிடம் இல்லை என்று கருதுபவர்களுக்கு -

பெண் என்பவள் வெறும் வெளியலங்காரம் எனும் நிலையை விட்டு உயர்ந்தவள், சமுதாயப் புத்தமைப்பில் ஓர் அங்கமாகவும் சமுதாயத்தின் உயர்வையும் சிறப்பையும் நிலைநாட்டுவதற்கு உறுதுணையாகவும் அவள் இருந்திட முடியும் எனும் உண்மையின் தெளிவுரை!

இஸ்லாத்தைத் தழுவுதல்

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அழைப்பை ஏற்று சுமார் 17 பேர் மட்டுமே இரகசியமான முறையில் இஸ்லாத்தைத் தழுவியிருந்த காலத்திலேயே 18வது நபராக அஸ்மா (ரழி) அவர்கள் இஸ்லாத்தின் முன்னணிப படையில் தம்மை இணைத்துக் கொண்டார்கள்!

மக்காவில் இஸ்லாத்தின் அழைப்புப் பணி பகிரங்கமாக மேற்கொள்ளப்படத் தொடங்கிய ஆரம்ப காலத்தில் இணை வைப்பாளர்களான குறைஷிகளின் உள்ளத்தில் கோபக்கனல் பொங்கி எழுந்ததும் - பிறகு எத்துணை பயங்கரமான கொடுமைகள் தலைவிரித்தாடின என்பதும் யாவரும் அறிந்ததே!

அல்லாஹ்வின் அருமைத் தூதரும் அவர் தம் ஆருயிர்த் தோழர் அபூபக்கர் ஸித்தீக் (ரழி) அவர்களும்கூட அக்கொடுமைகளிலிருந்து தப்பித்திருக்க முடியவில்லை. இவை அனைத்தையும் கண்ணுற்ற சிறுவயதுப் பெண்ணாய் இருந்த அஸ்மா (ரழி) அவர்களின் உள்ளத்தில் ஈமான் மென்மேலும் உறுதிப்பட்டது. எவ்விதத் தளர்வோ தயக்கமோ அடைந்தார்களில்லை. இக்கொடுமைகளுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டுமெனப் பொறுமையுடன் எதிர்பார்த்திருந்தார்கள்!

இறுதியில் மதீனா நகர் நோக்கி ஹிஜ்ரத் செய்வதற்கு இறைவன் தன் அன்புத் தூதருக்கும் அவர்தம் தோழர்களுக்கும் அனுமதி வழங்கினான்! வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அப்பயணம் வெற்றிபெற அஸ்மா (ரழி) அவர்கள் ஆற்றிய சேவை என்ன?

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்து மதீனா புறப்பட்ட இந்நிகழ்ச்சி வெளிரங்கத்தில் - ஏதோ இரு மனிதர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்குப் புறப்பட்டார்கள் எனும் வகையில் ஒரு சாதாரணமான பயணமாகத் தெறியலாம்! ஆனால் அந்தப் பயணம் - அதன் விளைவைப் பொறுத்து மகத்தானதொரு நிகழ்ச்சியே!

ஆம்! ஹிஜ்ரத் ஒரு சாதாரணப் பயணம் அல்ல! அண்ணலார் அவர்கள் 13 ஆண்டுகாலமாக மக்காவில் ஆற்றிவந்த ஏகத்துவப் பிரச்சாரத்தின் வீரப்பயணம்!

இஸ்லாத்தின் அழைப்புப்பணி ஒளிவுமறைவு, பலவீனம் எனும் நிலையிலிருந்து விடுபட்டு மனத்திண்மையுடனும் வலிமையுடனும் வெற்றிச் சிகரத்தை எட்டிப்பிடிக்கத் தொடங்கிய பயணம்!

ஒரு மாபெரும் சகாப்தத்தின் தொடக்கமான இந்த ஹிஜ்ரத் பயணம் அன்று தோல்வி அடைந்திருக்குமாயின், இறுதித் தூதரின் உயிரே பேராபத்திற்குள்ளாகும் நிலைமை!

ஆகையால்தான் நபியவர்கள் அந்தப் பயணத்தை மிகமிக இரகசியமாக மேற்கொண்டார்கள்! மிகவும் முக்கியமானவர்களுக்குத்தான் அதன் இரகசியம் தெரியும். அத்தகையவர்கள் மட்டுமே அதில் துணைபுரிய அனுமதிக்கப்பட்டார்கள்! அண்ணலாரின் குடும்பத்தைச் சார்ந்தவர்களில் அலீ (ரழி) அவர்களுக்குத் தெரியும்! அடுத்து, சித்தீகுல் அக்பரின் மூத்த புதல்வி அஸ்மா (ரழி) அவர்களுக்கும் அந்தப் பயணத்தின் அனைத்து விபரங்களும் தெரியும்! அவர்கள்தான் அதில் நபியவர்களுக்கும் தம் தந்தை அபூபக்கர் (ரழி) அவர்களுக்கும் மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாக பொறுப்புமிக்க உதவிகளை அளித்தார்கள்.!

அஸ்மா (ரழி) அவர்களின் சாதுர்யம்

அண்ணல் நபி (ஸல்) அவர்கள், குறைஷி குலத்து வன்னெஞ்சர்களால் முற்றுகையிடப்பட்டிருந்த தம்முடைய இல்லத்திலிருந்து இரகசியமாக வெளியேறி - தம் தோழர் அபூபக்கர் (ரழி) அவர்களுடன் மக்காவின் அருகிலிருந்த தௌர் குகையை அடைந்தார்கள். எதிரிகளின் நிலைமைகளை அனுசரித்து சில நாட்களாக அங்கே தங்கியிருக்க வேண்டும் என்பதும் - அந்நாட்களில் அஸ்மா (ரழி) அவர்கள்தான் அவ்விருவருக்கும் உணவு தயாரித்து மிகமிக இரகசியமாகக் குகைக்குச் சென்று கொடுத்து வரவேண்டும் என்பதும் திட்டம்!

அங்கே மக்காவில்.......! அண்ணலாரின் வீட்டுக்கு வெளியே தங்களின் கொடிய கொலைபாதகத் திட்டத்தை நிறைறே;றுவதற்காக நபியவர்கள் எப்போது வெளியே வருவார்கள் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த எதிரிகளுக்கு....... பாவம.;....! வீட்டினுள் விரிப்பில் படுத்துக் கொண்டிருப்பது முஹம்மத் (ஸல்) அல்ல, அலீ (ரழி) தான் என்பது அதிகாலை நேரம் புலர்ந்ததும் தான் தெரிய வந்தது! ஆனால் அப்போது அவர்களால் என்ன செய்திட முடியும்?

அவர்களின் தலைவன் அபுஜஹ்ல் தன்னுடைய திட்டம் தோல்வி அடைந்தது கண்டு வெகுண்டெழுந்தான்.......! அவனுக்குப் பைத்தியமே பிடித்து விடும்போல் இருந்தது!

அவனும் அவனுடைய தோழர்களும் அவர்களுக்கே உரிய போலிப் பகட்டெனும் செருக்குடனும் அபூபக்கர் (ரழி) அவர்களின் இல்லத்திற்கு வந்தார்கள். அபூஜஹ்ல் வேகமாகக் கதவைத்தட்டினான்! உள்ளே இருந்து வெளியே வந்தது வேறு யாருமல்ல, இளம் வயதுப் பெண்மணியாகிய அஸ்மா (ரழி) தான்! குகையில் தங்கியுள்ள அண்ணலாருக்கம் தம் அன்புத் தந்தையாருக்கும் வீட்டில் உணவு தயார் செய்து கொண்டிருந்தார்கள்!.

உன் தந்தை எங்கே? இது அபூஜஹ்லின் அகங்காரக் கேள்வி! அவர்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது:

உரிய பதில் வராததைக் கண்டதும் அபூஜஹ்ல் அதட்டினான்: மிரட்டினான் ஆனால் அஸ்மா (ரழி) அவர்கள் எதற்கும் அஞ்சவில்லை: அசைந்து கொடுக்கவில்லை. அப்போது கொடியோன் அபூஜஹ்ல் அன்பே உருவான அஸ்மா (ரழி) அவர்களின் அழகிய கன்னத்தில் கையை ஓங்கி பளீரென அறைந்தான்!

ஆத்திரத்தால் அறிவிழந்தவர்கள் இப்படித்தான் செய்வார்கள் ஆண்களிடம் தங்களின் ஜம்பம் பலிக்காவிட்டால் பாவம்! பெண்களைத்தான் அடிப்பார்கள்!

பொறுமைக் கடலான அஸ்மா (ரழி) அவர்கள் அந்த அற்பனின் அடியைத் தாங்கிக்கொண்டு ஆற்ற வேண்டிய பணிகளை முறையோடு கவனி;த்திடலானார்கள். அந்தக் கோழைகளின் மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சி நடுங்கிச் சோர்ந்து உட்கார்ந்து விடவில்லை - ஹிஜ்ரத் பயணம் இப்போது முன்னைவிட ஜாக்கிரதையாக தௌர் குகையிலிருந்து தொடர்ந்திட வேண்டியதிருப்பதால்!

அஸ்மா (ரழி)யின் சகோதரர் - அபூபக்கர் அவர்களின் மூத்த புதல்வர் அப்துல்லாஹ் என்பவர் (அதுவரை அவர் முஸ்லீம் ஆகாமல் இருந்தார்) பகல் நேரங்களில் மக்காவின் தெருக்களில் சுற்றித் திரிந்து எதிரிகளின் திட்டங்கள், செயல்பாடுகள் என்னவென்பதை அறிந்து கொண்டு வருவார். மாலை நேரத்தில் தம் சகோதரியுடன் குகைக்கு வந்து எல்லாச் செய்திகளையும் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவிப்பார்!

அபூபக்கர் (ரழி) அவர்களின் வேலையாள் அமீர் இப்னு ஃபுஹைரா என்பவரின் மூலம் ஒரு தற்காப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது! அது என்ன? அவர் அபூபக்கர் (ரழி) அவர்களுக்குச் சொந்தமான ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிக்கொண்டே சென்று குகை அருகே வருவார். அங்கு அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கும் அபூபக்கர் (ரழி) அவர்களுக்கும் பால் கறந்து கொடுத்துவிட்டு, பிறகு அஸ்மா (ரழி) அவர்களும் அவர்தம் சகோதரரும் குகையிலிருந்து வீட்டுக்குத் திரும்பும்போது பின்னாலேயே அந்த ஆடுகளை ஓட்டிக்கொண்டு வருவார்! அதன்மூலம் அவ்விருவரின் காலடிச் சுவடுகளை அழித்து விடுவார். எதிரிகளில் எவனாவது ஒருவன் அவ்விருவரின் காலடிச் சுவடுகளைப் பின்பற்றிச் சென்றுவிட்டால்..! இரகசியம் வெளிப்படுவதற்கான அந்த வழியும் இந்த ஏற்பாட்டினால் அடைக்கப்பட்டது!

இளம் வயதுடைய அஸ்மா (ரழி) அவர்கள் இத்தகைய நுட்பமான ஏற்பாடுகளையெல்லாம் செவ்வனே நிறைவேற்றினார்களெனில் அவர்களின் அறிவுத் திறனை என்னவென்றுரைப்பது!

குகையில் மூன்று நாட்கள் தங்கியிருந்த பிறகு நபி (ஸல்) அவர்கள் அஸ்மா (ரழி) அவர்களிடம் கூறினார்கள், 'அலீ (ரழி) அவர்களிடம் சென்று நாளை இரவு இரு ஒட்டகங்களையும் வழிகாட்டியாக நியமிக்கப் பட்டவரையும் அழைத்துக் கொண்டு இங்கு வரவேண்டும் என்று அறிவித்து விடுவீராக!

..அலீ (ரழி) அவர்கள் இரு ஒட்டகங்களையும் வழிகாட்டியையும் அழைத்துக் கொண்டு உரிய நேரத்தில் கட்டளைப்படி வந்து சேர்ந்தார்கள்!

மறுபுறத்தில்.. அஸ்மா (ரழி) அவர்கள் பல நாட்களுக்குப் போதுமான உணவையும் தண்ணீரையும் தயார் செய்து கொண்டு வந்தார்கள்! அங்கே உணவு மற்றும் தண்ணீர் நிரம்பிய தோல் பைகளை முறையாகக் கட்டுவதற்கு கயிறு எதுவும் கிடைக்கவில்லை! என்ன செய்வது? சித்தீகின் மகளுக்கு பளிச்சென்று ஒரு யோசனை பட்டது!

உடனே தனது இடுப்பில் கட்டியிருந்த வார்த் துணியை அவிழ்த்து இரண்டாகக் கிழித்து இரு பைகளையும் கட்டினார்கள்.

இந்த புத்திசாலித்தனத்தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் ஷதாதுந் நிதாகைன்| (இரு வாருடையவரே!) என்று அழைத்தார்கள்! அன்றிலிருந்து இன்று வரை அஸ்மா (ரழி) அவர்கள் இதே பெயரில் புகழடைந்துள்ளார்கள்!

பணமும் பாட்டனாரும்

அஸ்மா (ரழி) அவர்களின் அறிவு அவர்களின் ஈமானைப் போன்று உயர்வானதாய் இருந்தது. அவர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் அறிவுப்பூர்வமாய் அமைந்திருந்தன. இதோ! மற்றொரு நிகழ்ச்சி!

அபூபக்கர் (ரழி) அவர்கள் ஹிஜ்ரத்தின்போது வீட்டிலிருந்த பணம் முழுவதையும் எடுத்துச் சென்றிருந்தார்கள்! எதற்காக? தம் குடும்பத்தினருக்கு எதுவும் கொடுக்கக் கூடாது என்பதற்காக அல்ல! மாறாக, முஹம்மர் (ஸல்) அவர்களுக்கு உதவ வேண்டும், அவர்கள் மேற்கொண்ட அழைப்புப் பணி உலகமெங்கும் பரவிட வேண்டும் என்பதற்காகத்தான்! தம்மை விடவும் தம் குடும்பத்தை விடவும் உயர்வாய்க் கருதிக் கொண்டிருந்த ஏகத்துவப் பிரச்சாரத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும் எனும் உன்னதக் குறிக்கோளுக்காகத்தான் அபூபக்கர் (ரழி) அவர்கள் இவ்வாறு செய்தார்கள்.

இந்த விஷயம் அவர்களின் தந்தை அபூகுஹாஃபாவுக்குத் தெரிய வருகிறது. அவர் முதியவராகவும கண்பார்வை இழந்தவராகவும் இருந்தார். அதுவரை அவர் இஸ்லாமிய நெறியை ஏற்றிருக்கவில்லை! மிகுந்த மனவேதனையுடனும் கோபத்துடனும் வந்து தம்முடைய பேத்தியான அஸ்மா (ரழி) அவர்களை நோக்கிக் கேட்டார்.

அபூபக்கர் உங்களை மற்றொரு துன்பத்தில் ஆழ்த்தியுள்ளார். உங்களைத் தன்னந்தனியே விட்டு விட்டுச் சென்றது மட்டுமல்லாமல் தன்னுடைய பணம் முழுவதையும் - உங்களுக்குத் தராமல் கொண்டு சென்று விட்டாரே?'

என் அன்புப் பாட்டனாரே! அப்படியல்ல என்று பதிலளித்த அஸ்மா (ரழி) அவர்கள் முதியவராகவும் கண்பார்வை இழந்தும் உள்ள தம் பாட்டனாரை இந்நேரத்தில் மனம் நோகவைப்பது நல்லதல்ல எனக் கருதி, சிறுசிறு கற்களைக் கொஞ்சம் பொறுக்கி எடுத்துக் கொண்டுவந்து அபூபக்கர் (ரழி) அவர்கள் பணம் வைத்துக் கொண்டிந்த பையில் அவற்றைப் போட்டு அதனைப் பணப் பெட்டியில் வைத்துவிட்டார்கள்.!

இங்கு வந்து பாருங்களேன்!' என்று கூறி பாட்டனாரின் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு சென்று அந்தப் பையில் வைத்து 'இது என்னவென்று சொல்லுங்கள்' என்றார்கள்!

அப்போது அபூகுஹாஃபா (ரழி) அவர்கள் மனம் நிம்மதி அடைந்து, 'இதனை உங்களுக்காக விட்டுச் சென்றுள்ளாரெனில் நல்லதைத்தான் செய்துள்ளார்' என்று கூறினார்கள்.

அசத்தியவாதிகளின் நரித்தனமான பிரச்சாரம்.

ஹிஜ்ரத் மேற்கொள்ளுமாறு இறைவன் பிறப்பித்த கட்டளையை ஏற்று முஸ்லிமகள் மக்காவை விட்டு மதீனாவில் குடியேறிய தொடக்கத்தில் - மதீனாவின் தட்பவெப்ப சூழ்நிலை முதலில் அவர்களின் உடல்நிலைக்கு ஒத்துவரவில்லை. இறைவனின் நாட்டப்படி, சிறிது காலம் முஹாஜிர்களின் எந்தக் குடும்பத்திலும் குழந்தைகளே பிறக்கவில்லை.

இஸ்லாத்தின் எதிரிகளான யூதர்கள் இந்த இயற்கையான நிலையைக்கூட எதிர்ப்பு ஆயுதமாகக் பயன்படுத்தத் தவறவில்லை. உடனே வதந்திகளைக் கிளப்பினார்கள். அதாவது, முஸ்லிம்களுக்கு சூனியம் வைக்கப்பட்டுள்ளது. அதனால்தான் அவர்களில் ஒருவருக்குக்கூட குழந்தை பிறக்கவில்லை. அவர்களுக்குப் பிறகு அவர்களின் பெயரைக் கூற சந்ததிகளே இருக்கமாட்டார்கள் என்று அறிவுக்குப் புறம்பான - அநாகரீகமான பொய்யைப் பரப்பிவிட்டு, அதன்மூலம் முஸ்லிம்களின் இறைநம்பிக்கையைப் பலவீனப்படுத்த முயன்றார்கள்.

அசத்தியவாதிகளின் எல்லா வழிகளிலும் தங்களின் நரித்தனத்தைக் காண்பித்துக் கொண்டிருப்பார்கள் என்பது இன்று வரைக்கும் நாம் கண்டுவரும் உண்மைதானே!

அஸ்மா (ரழி) அவர்கள் இதுவரை ஹிஜ்ரத் செய்து மதீனாவுக்கு வரவில்லை. அவர்களின் மாமி மகன் ஜுபைர் இப்னு அவ்வாம் (ரழி) அவர்களுடன் மக்காவிலேயே அவர்களுக்குத் திருமணம் நடைபெற்றிருந்தது!

ஓரிரு மாதங்களுக்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியரையும் ஏனைய நெருங்கிய உறவினர்களையும் அழைத்து வருவதற்காக ஜைத் இப்னு ஹாரிஸா (ரழி) மற்றும் அபூ ராஃபிஉ (ரழி) இருவரையும் மக்காவுக்கு அனுப்பினார்கள். இதுபோன்று அபூபக்கர் (ரழி) அவர்கள் தம் பணியாளின் மூலம் தம் மகன் அப்துல்லாஹ்வுக்குக் கடிதம் கொடுத்து விட்டார்கள். அதில் அப்துல்லாஹ்வின் தாயார் உம்மு ரூமானையும் (அபூபக்கர் (ரழி) அவர்களின் இரண்டாவது மனைவி) அவரது சகோதரிகளையும் மதீனாவுக்கு அழைத்து வருமாறு ஏவப்பட்டிருந்தார்.

அதற்கு ஏற்ப அப்துல்லாஹ் தம் தாயாரையும் சகோதரிகள் அஸ்மா, ஆயிஷா (ரழி) இருவரையும் அழைத்துக் கொண்டு மதீனா நோக்கிப் புறப்பட்டார்!

அஸ்மா (ரழி) அவர்கள் மதீனாவுக்கு வந்ததும் கொஞ்ச நாட்களில் அவர்களுக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்தது! ஹிஜ்ரத்திற்குப் பிறகு முஹாஜிர்களில் முதன் முதலில் பிறந்த குழந்தை இதுவே! இதனை அறிந்த முஸ்லிம்கள் அளவிலா மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனந்த மிகுதியால் ஷஅல்லாஹூ அக்பர்| என்று முழங்கினார்கள்.

அஸ்மா (ரழி) அவர்கள் தம் குழந்தைக்கு அப்துல்லாஹ் எனப் பெயர் சூட்டி, அதனைத் தூக்கிக் கொண்டு அண்ணல் நபி (ஸல்) அவர்களின் திருச்சமூகம் வந்தார்கள். மாநபி (ஸல்) அவர்கள் மகிழ்வோடு குழந்தையை வாங்கி, மடியில் வைத்துக் கொண்டு ஒரு பேரீச்சம் பழத்தைத் தம் திருவாயில் இட்டு மென்று அதனைக் குழந்தைக்கு ஊட்டினார்கள். பிறகு குழந்தைக்காக நற்பாக்கியம் வேண்டி இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள்!

இந்தச் செய்தியைக் கேட்ட யூதர்கள் பொறாமைத் தீயில் வெந்தார்கள்.

ஏழை மணாளரின் மனைவி!

அஸ்மா (ரழி) அவர்கள் பிறந்து வளர்ந்த குடும்பமும் வாழ்க்கைப்பட்ட குடும்பமும் மக்கா நகரில் பெரும் செல்வாக்குப் பெற்ற, வளம் கொண்ட குடும்பங்களாய் இருந்தன. ஆம்! அவர்கள் மக்கா நகரின் பெருந்தலைவரின் (அபூபக்கர் (ரழி) அவர்களின்) மகள், மாபெரும் தலைமைக் கோத்திரத்தின் செல்வச் செழிப்புள்ள இளைஞரின் (ஜூபைர் (ரழி) அவர்களின்) மனைவி! குறைஷிகளிடையே மதிப்பு மரியாதை கொண்ட தலைவரான அப்துல் உஸ்ஸா என்பவரின் மகளார் கதீலா என்பவர்தான் அவர்களின் தாயார்!

ஆயினும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட குற்றத்திற்காக| மக்கத்து குறைஷிகளின் தயவினால்| எவ்வாறு பெரிய பெரிய மனிதர்களின் பொருளாதார நிலை பாழாக்கப்பட்டதோ - அவ்வாறே அஸ்மா (ரழி) அவர்களின் கணவர் ஜூபைர் (ரழி) அவர்களும் எல்லாவற்றையும் இழக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. வறுமையின் கோரப் பிடிக்குள் தள்ளப்பட்டார்கள்!

ஜூபைர் (ரழி) அவர்கள் அப்போது 17 வயது இளைஞர். இஸ்லாத்தை தழுவியதற்காக முதலில் அவர்களுடைய குடும்பத்தினர் அவர்களை அடித்து உதைத்தார்கள். வீட்டில் அடைத்த வைத்தார்கள். அப்படியும் அவர்களின் பிடிவாதம்|தெளியவில்லை என்றானபோது அவர்களை வீட்டிலிருந்து விரட்டினார்கள். இறுதியில் ஜூபைர் (ரழி) அவர்கள் அபிசீனியா நோக்கி ஹிஜ்ரத் மேற்கொள்ள வேண்டியதாயிற்று!

செல்வம் கொழித்த குடும்பத்தின் இந்த ஏழை| மணாளருக்குத்தான் அஸ்மா (ரழி) அவர்கள் மணம் முடிக்கப்பட்டார்கள். அவர்கள் மனம் சோர்ந்திடவில்லை. ஏழை என்றாலும் பரவாயில்லை. அவர் ஓர் இறைநம்பிக்கையாளர் எனும் வகையில் மகிழ்வோடு அந்தத் திருமணத்தை அஸ்மா (ரழி) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

கொஞ்ச நாட்களுக்குப் பிறகு இருவரும் ஒருவர் பின் ஒருவராக ஹிஜ்ரத் மேற்கொண்டு மதீனாவுக்கு வந்தபோது கொஞ்சநஞ்சம் இருந்த பொருள்களும் மக்காவில் மாட்டிக் கொண்டன! இப்போது மதீனாவில் அவ்விருவருக்கும் அல்லாஹ்வின் பெயரைத் தவிர வேறு எந்தச் சொத்தும் இல்லை! ஒருசில நாட்களுக்குப் பிறகு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒரு சிறிய பேரீச்சந் தோட்டத்தை வழங்கினார்கள்!

மதீனாவில் ஆரம்ப காலத்தில் தாம் பட்ட கஷ்டங்களைப் பற்றிய ஒரு சித்திரத்தை அஸ்மா (ரழி) அவர்களே விளக்கிக் காட்டியுள்ளார்கள். அதனை அவர்களின் வாய்மொழியாகவே கேட்டால் நல்லது என்கின்றீர்களா? இதோ கூறுகின்றார்கள், கேளுங்கள்!

ஜூபைர் (ரழி) அவர்களுடன் எனக்குத் திருமணம் நடைபெற்ற நேரத்தில் அவரிடம் பணம் இல்லை, எந்தப் பணியாளும் இல்லை! வறுமை வயப்பட்டும் அளவு கடந்த துன்பத்திற்குள்ளானவராகவும் இருந்தார்கள். அவருக்கென உரியவை ஒரு குதிரையும் ஓர் ஒட்டகமும்தான்! மேலும் நானே அவற்றைக் கவனித்துக் கொள்ள வேண்டியதாயிற்று!

மதீனாவுக்கு வந்தபோது நபி (ஸல்) அவர்கள் பேரிச்சந் தோட்டமாக கொஞ்சம் நிலத்தை ஜூபைர் (ரழி) அவர்களுக்கு வழங்கினார்கள். அது மதீனாவிலிருந்து சுமார் ஒன்பது மைல் தொலைவில் இருந்தது! நான் தினமும் அங்கு சென்று பேரீச்சங் கொட்டைகளை பொறுக்கி, ஒன்று சேர்த்து மூட்டையாகக் கட்டி தலையில் சுமந்து கொண்டு வருவேன். வீட்டிற்கு வந்து அவற்றை எனது கையாலேயே உடைத்து ஒட்டகத்திற்கு தீனியாகப் போடுவேன். வாளியினால் தண்ணீர் இறைத்து நிரப்புவேன். மேலும் வீட்டின் எல்லா வேலைகளையும் நானே செய்து கொண்டிருந்தேன். எனக்கு நல்லவிதமாக ரொட்டி சமைக்கத் தெரியாது. ஆகையால் மாவைப் பிசைந்து மட்டும் வைத்துவிடுவேன். எனது வீட்டுக்கு அருகில் அன்ஸாரிப் பெண்கள் சிலர் வசித்தார்கள். அவர்கள் வந்து அன்புடனும் பாசத்துடனும் ரொட்டிகள் சமைத்துத் தந்து கொண்டிருந்தார்கள்!'

தினமும் இத்தகைய சிரமங்கள் எனக்கு நேர்ந்து கொண்டிருந்தன. ஒருநாள் தோட்டத்திலிருந்து பேரீச்சங் கொட்டைகளை மூட்டை கட்டி சுமந்து வந்து கொண்டிருந்தேன். வழியில் நபி (ஸல்) அவர்கள் சந்தித்தார்கள். அவர்கள் ஒட்டகத்தின் மீது இருந்தார்கள். அவர்களின் தோழர்கள் சிலரும் அவர்களுடன் வந்தார்கள்.

இவ்வாறு சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் என்னை நபியவர்கள் கண்டபோது என் மீது இரக்கப்பட்டு - ஒட்டகத்தைப் படுக்கச் செய்தார்கள். நானும் அதில் ஏறி அவர்களுக்குப் பின்னே அமர்ந்து செல்வதற்காக! ஆனால் நான் வெட்கத்தின் காரணத்தால் அதில் பயணமாகவில்லை!

இந்த நிகழ்ச்சிக்கு சில நாட்களுக்குப் பிறகு என் தந்தையார் அபூபக்கர் (ரழி) அவர்கள் எனக்கு ஒரு பணியாளைக் கொடுத்து உதவினார்கள். அதனால்; எனது சிரமம் பெருமளவு குறைந்து விட்டது.'

அபூபக்கர் (ரழி) அவர்கள் ஒரு பணியாளை நியமித்தபோது அஸ்மா (ரழி) அவர்கள் தமக்கு அரியாசனமே கிடைத்துவிட்டது போன்றுதான் உணர்ந்தார்கள்! அப்படியெனில் அவர்கள் அன்றாடம் எந்த அளவுக்கு சிரமப்பட்டு உழைத்து வாழ்நாளைக் கழித்துக் கொண்டிருந்திருப்பார்கள் என்பதைப் பாருங்கள்!

இத்தகைய ஏழ்மையின் காரணத்தால்தான் அஸ்மா (ரழி) அவர்கள் வீட்டின் தேவைகளுக்காக மிகவும் இறுக்கிப் பிடித்துச் சிக்கனமாகச் செலவு செய்து கொண்டிருந்தார்கள். மிதமிஞசிய கடும் சிக்கனப் போக்கினை ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் கண்டித்தார்கள். 'இவ்வாறு ஒவ்வொன்றையும் அளந்து நிறுத்திப் பார்த்து - கஞ்சத்தனம் செய்து கொண்டு இருக்காதீர்கள். அப்படிச் செய்தால் அல்லாஹ்வும் அந்த அளவுக்கே வழங்குவான்' என்று அறிவுரை பகர்ந்தார்கள்.

வறுமைப்பட்ட கணவருக்கு வாழ்க்கைப்பட்டோமே, இப்போது ஏழ்மையோடு எதிர்நீச்சல் போடவேண்டியதுள்ளதே| என்று மனம் வெதும்பி விதியை நொந்து கொண்டிருக்கும் பெண்மணிகளே, கண்மணி அஸ்மா (ரழி) அவர்களின் மீதி வரலாற்றையும் கேளுங்கள்!

அஸ்மா (ரழி) அவர்கள் துன்பங்கள் எதிர்ப்பட்ட அத்தனை சந்தர்ப்பங்களிலும் கொஞ்சமும் பொறுமையை கைவிட்டார்களில்லை! பதறிப் பரிதவிக்கவில்லை! நிராசை அடைந்து விதியை நொந்து கொள்ளவில்லை! விளைவு? அத்தகைய பொறுமைக்கான பலன் கைமேல் கிடைத்தது! ஆம்! அஸ்மா (ரழி) அவர்களை வளமான வாழ்வு தேடி வந்தது! அவர்கள் தனவந்தர் ஆனார்கள்! அவர் மீதும் அவரின் கணவர் மீதும் அல்லாஹ்வின் அருட்கொடைகள் கொட்டின. ஜூபைர் (ரழி) அவர்களுக்கு வியாபாராத்தில் நிறைய இலாபம் கிடைத்தது. இறைவன் அவர்களின் வாழ்கையை வளப்படுத்தினான்!

அவர்களுடைய வாழ்கையின் இலக்கணம் இதுதான்!

அஸ்மா (ரழி) அவர்களின் குடும்பம் எண்ணற்ற கஷ்ட - நஷ்டங்களையும் துன்ப துயரங்களையும் பொறுமையோடு தாங்கி வந்த பிறகு இப்போது பொருளாதாரத் துறையில் பிரமிக்கத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதெனில் அது எப்படிச் சாத்தியமாயிற்று? தவறான வழி சம்பாத்தியமா? இல்லை! அவர்களின் கணவர் ஜூபைர் (ரழி) அவர்கள், 'நான் நபி (ஸல்) அவர்களின் உயிர்த் தோழர் மட்டுமல்ல, அவர்களின் நெருங்கிய இரத்த பந்தமுடைய - புனிதமான உறவு முறையுடைய குடும்பத்தைச் சார்ந்தவனும் ஆவேன்' என்று மக்களிடம் பிரபலப்படுத்திக் கொண்டு, பணம் வசூலித்துப் பணக்காரர் ஆனாரா? இல்லவே இல்லை! நீதி நேர்மையையும் கடினமான உழைப்பையும் அஸ்திவாரமாகக் கொண்ட வாணிபத்தின் வாயிலாக செல்வம் ஈட்டினார்கள்! நபித் தோழர்களில் அப்துல் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்களைப் போன்றவர்கள் எப்படி வியாபாரம் செய்து இலட்சாதிபதி ஆனார்களோ அப்படித்தான் ஜூபைர் (ரழி) அவர்களும் சம்பாதித்தார்கள்!

முஸ்லிம்கள் வாழ்ந்த வாழ்கையின் இலக்கணம் இதுதான். அவர்களின் வாழ்கையை கடின உழைப்பும் முயற்சியும் அலங்கரித்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் இறையச்சமும் நீதி தவறாத் நெஞ்சுரமும் அதற்குத் தூய்மையையும் புனிதத் தன்மையையும் வழங்கிக் கொண்டிருக்கும்.

இதன் காரணமாகத்தான் ஜூபைர் (ரழி) - அஸ்மா (ரழி) தம்பதிகளிடத்தில் ஆணவமோ அகங்காரமோ பிறரை இழிவாய் கருதும் மனநிலையோ எள்ளவும் காணப்படவில்லை! மரியாதைக்குரிய அஸ்மா (ரழி) அவர்கள் ஏழ்மையின்போது கடைப்பிடித்த பொறுமையையும் எழிமையையும் இப்போதும் கடைப்பிடித்தார்கள்! முரட்டு ஆடைகளை அணிபவராகவும் காய்ந்த ரொட்டிகளை உண்பவராகவும்தான் இருந்தார்கள்!

ஒருபோது அவர்களின் மகன் முன்திர் இப்னு ஜூபைர் (ரழி) அவர்கள் ஈராக்கின் போரிலிருந்து திரும்பி வரும்போது தம் தாயாருக்காக மிகவும் விலை உயர்ந்த மெல்லிய - மென்மையான சேலைகளை வாங்கி வந்தார். அவற்றைத் தம் தாயாரிடம் அவர் கொடுத்தபோது, அச்சேலைகளின் பளபளப்பையும் மென்மையையும் பார்த்த அஸ்மா (ரழி) அவர்கள், 'நான் இதுபோன்ற மெல்லிய சேலைகளை அணிவதில்லை' என்று சொல்லி திருப்பிக் கொடுத்து விட்டார்கள்!

ஆம்! அஸ்மா (ரழி) அவர்கள் வறுமையின் காரணத்தால் பல மைல்களுக்கு அப்பாலிருந்து பேரீச்சங் கொட்டைகளைச் சுமந்து... அன்று பட்ட கஷ்டங்களின் பாடங்களை| மனத்தில் பசுமையாக்கிக் கொண்டிருந்ததால் இன்று பெருமைக்கு ஆளாகவில்லை! பகட்டையும் பளபளப்பையும் விரும்பவில்லை!

ஆனால் ஒரு கேள்வி எழலாம். செல்வ நிலை ஏற்பட்ட பிறகும் அஸ்மா (ரழி) அவர்கள் முரட்டு ஆடைகளை உபயோகித்துக் கொண்டு ஏழ்மைக் கோலத்தில் வாழ்ந்தார்களெனில், பழைய கருமித்தனத்தை| இன்னும் கைவிட்டார்களில்லை என்றுதானே பொருள்?

இல்லை! அஸ்மா (ரழி) அவர்கள் தயாள குணமும் தாராள மனப்பான்மையும் பெற்றிருந்தார்கள். அல்லாஹ் வழங்கிய செல்வத்திலிருந்து ஏழை எழியவருக்கு ஈந்து மகிழும் நிலையை அடைந்தார்கள். அவர்கள் தம்முடைய பிள்ளைகளுக்கு வழங்கிய அறிவுரையைப் பாருங்கள்.

பிறருக்கு உதவி செய்வதற்காகவும் அவர்களின் தேவைகளை நிறைவு செய்வதற்காகவும்தான் இறைவன் செல்வத்தை வழங்குகிறானே தவிர, சேமித்து வைப்பதற்காக அல்ல! ஆகையால் அல்லாஹ்வின் அடிமைகளுக்கு உதவுங்கள்! உங்கள் செல்வத்திலிருந்து அல்லாஹ்வின் அடிமைகளுக்கு நீங்கள் உதவிடவில்லை யானால் அது கஞ்சத்தனம் ஆகும்! அப்போது அல்லாஹ்வும் தனது அருளையும் கருணையையும் உங்களுக்கு வழங்காது போய்விடுவான். நீங்கள் தான தர்மங்கள் செய்வீர்களாயின் உண்மையில் அதுவே உங்களுக்கான சிறந்ததொரு பொக்கிஷமாகும். அது என்றைக்கும் குறைந்து விடாது. மேலும் அது வீணாகிப் போய்விடும் என்று அச்சப்பட வேண்டியதில்லை.'

இது போன்ற அறிவுரைகளை வழங்கிய அதே நேரத்தில் செயல் ரீதியில் அவற்றை நடைமுறைப்படுத்தியும் காட்டினார்கள் அஸ்மா (ரழி) அவர்கள்! அவர்களின் மகனார் அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். 'என் தாயார் மற்றும் சிறிய தாயார் ஆயிஷா (ரழி) அவர்கள் இருவரை விடவும் அதிகமாக கொடை வழங்குபவர் எவரையும் நான் கண்டதில்லை. கொடை வழங்கும் முறை அவ்விருவரிடமும் மாறுபட்டிருந்தது. ஆயிஷா (ரழி) அவர்களின் முறை என்னவெனில், அவர்கள் தமது வருவாயைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து வைப்பார்கள். கடைசியில் கணிசமான அளவு சேர்ந்ததும் தேவைப்பட்டோருக்கு பங்கிட்டு அளித்து விடுவார்கள். ஆனால் அஸ்மா (ரழி) அவர்களின் முறை இதற்கு மாற்றமாக இருந்தது. அவர்கள் நாளொன்றுக்கு எதையும் சேமித்து வைப்பதில்லை. எது மிஞ்சினாலும் அதே நேரத்தில் பங்கிட்டு கொடுத்து விடுவார்கள்.'

பிற்காலத்தில் - அவர்களின் சகோதரி ஆயிஷா (ரழி) அவர்கள் மரணம் அடைந்தபோது ஒரு நிலத்தைத் தமது சொத்தாக விட்டுச் சென்றார்கள். அதற்கு அஸ்மா (ரழி) அவர்களைத் தவிர வேறு வாரிசுகள் யாரும் இல்லை. ஆகையால் அந்த பூமி அவர்களுக்கே கிடைத்தது! அதனை விற்றுக் கிடைத்த சுமார் ஒரு இலட்சம் திர்ஹம் முழுவதையும் தம்முடைய உறவினர்களில் தேவைப்பட்டோருக்குப் பங்கிட்டு கொடுத்து விட்டார்கள்!

இப்படிக் கணக்கின்றி வழங்கும் கரமுடையவர்களாய் அஸ்மா (ரழி) அவர்கள் திகழ்ந்தார்கள். ஆனால் அவர்களின் கணவர் ஜூபைர் (ரழி) அவர்களின் இயல்பில் கொஞ்சம் கடுமை இருந்தது. ஆகையால், அஸ்மா (ரழி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் ஒருமுறை கேட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! என் கணவரின் சொத்திலிருந்து அவரின் அனுமதி இன்றி - அநாதைகளுக்கும் ஏழைகளுக்கும் கொடுத்து உதவலாமா?'

நபியவர்கள், 'ஆம்! கொடுக்கலாம்' என்றார்கள்.

சுவரின் நிழலும் சிறு வியாபாரியும்

அஸ்மா (ரழி) அவர்கள் இத்தகைய தாராளத்துடன் நடந்து கொண்டாலும் - வீடு வாசல்களைப் பேணுவதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். எவ்வளவு சிறிய பிரச்சனையானாலும் அவருடைய அனுமதி பெற்றே செய்யவேண்டும் என்ற பொறுப்புணர்வு கொண்டிருந்தார்கள்!

ஒரு தடவை வீட்டில் ஜூபைர் (ரழி) அவர்கள் இல்லாதபோது ஏழை வியாபாரி ஒருவர் வந்து அஸ்மா (ரழி) அவர்களிடம் உதவி வேண்டி நிற்கின்றார். 'உங்கள் வீட்டுச் சுவரின் நிழலில் பொருட்களை வைத்து விற்பதற்கு அனுமதி தாருங்கள்' என்று கோரினார்.

அஸ்மா (ரழி) அவர்கள் கூறினார்கள்.

நான் அனமதி வழங்கிவிடுவேன் ஆனால் ஜூபைர் (ரழி) அவர்கள் வந்து மறுத்து விடுவார்களாயின் பெரிய சிக்கலாய் போய்விடும். ஆகையால் வீட்டில் அவர்கள் இருக்கும்போது வந்து கேளுங்கள்!'

ஜூபைர் (ரழி) அவர்கள் வீடு திரும்பியபோது மீண்டும் அந்த வியாபாரி வீட்டு வாசலில் வந்து நின்றுகொண்டு தனது கோரிக்கையை வத்தார்.

அப்துல்லாஹ்வின் தாயார் அவர்களே! நான் ஓர் ஏழை. அன்றாடம் சில பொருட்களை விற்றுத்தான் பிழைக்கின்றேன். உங்கள் வீட்டுச் சுவரின் நிழலில் அமர்ந்து வியாபாரம் செய்ய விரும்புகிறேன். தயை கூர்ந்து அனுமதி தாருங்கள்.'

அஸ்மா (ரழி) அவர்கள் 'எனது வீட்டை விட்டால் மதீனாவில் உமக்கு வேறு வீடு கிடைக்கவில்லையா?' என்று அதட்டுவது போன்று கேட்டார்கள்.

இந்தப் பதிலைக் கேட்டுக்கொண்டிருந்த ஜூபைர் (ரழி) அவர்கள், 'உனக்கு என்ன நேர்ந்துவிட்டது? ஓர் ஏழை வியாபாரம் செய்வதைத் தடுக்கின்றாயே?' என்று தம் மனைவியைக் கண்டித்தார்கள்!

உடனே அஸ்மா (ரழி) அவர்கள் அனுமதி வழங்கிவிட்டார்கள். அதைத்தானே அவர்கள் எதிர்பார்த்தார்கள்!

தாயின் பாசமும் இறைவசனமும்.

ஓரிறைக் கொள்கையிலும் அதன் கோட்பாடுகளிலும் அஸ்மா (ரழி) அவர்கள் உறுதியுடன் இருந்தார்கள். இறைவனை நிராகரிக்கும் போக்கும், கண்ட கண்ட பொருள்களையெல்லாம் கடவுளாகக் கருதி அவற்றை வணங்கி வழிபடுவதும் அவர்களுக்கு அறவே பிடிக்காது! எந்த அளவுக்கெனில். அப்படி வாழும் இணைவைப்பவர்களை அவர்கள் மிக நெருங்கிய உறவினர்களாயினும் சரியே, மிகக் கடுமையாக வெறுப்பவர்களாய் இருந்தார்கள்!

அன்றைய சமூகத்தில் பெரும்பாலான முஸ்லிம்களுக்கு ஒரு தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. அவர்களுடைய நெருங்கிய உறவினர்களில் அல்லது தூரத்து உறவுமுறையுடையவர்களில் சிலர் அல்லது பலர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதிருந்தார்கள். அப்படி ஏற்றுக் கொள்ளாதவர்களில் சிலர் கடும் பகைவர்களாகி இஸ்லாத்தை அழிக்கும் கொடூரச் செயல்களிலும் ஈடுபட்டிருந்தனர்! இத்தகைய கடும் பகைவர்களுடன் எவ்விதத் தொடர்பும் நட்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று முஸ்லிம்களுக்குக் கட்டளையிடப்பட்டிருந்தது.

ஒருவர், இறைவன் மீதும் இஸ்லாத்தின் எதிரிகளிடமும் ஒரே நேரத்தில் நேசம் கொள்வது என்பது எப்படி சாத்தியமாகும்? நம்முடைய நெருங்கிய உறவினர்களாயிற்றே என்று அந்த எதிரிகள் மீதான அன்புக்கும் தன் உள்ளத்தில் இடம் அளித்து, அவர்களிடம் நேசம் பாராட்டி நெருங்கிப் பழகும் மனிதரை உண்மையான இறைநம்பிக்கையாளராக எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

இந்நிலையில்தான் ஒருமுறை அஸ்மா (ரழி) அவர்களின் தாயார் கதீலா பின்த் அப்துல் உஸ்ஸா என்பவர் தம் மகளைப் பார்ப்பதற்காக மதீனா வருகின்றார். அவர் இணைவைப்புக் கொள்கையிலேயே இருந்தார். இஸ்லாத்தை பிடிவாதமாய் ஏற்றுக் கொள்ள மறுத்தார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தம் தாயாரைச் சந்திப்பதில் அஸ்மா (ரழி) அவர்களுக்கு அளவிலா மகிழ்ச்சிதான்! ஆர்வமிகுதியால் அவருடைய உள்ளம் துடிக்கின்றது. விழிகளில் பிரகாசம் மின்னிட இதழ்களில் புன்னகை மலர்ந்திட கரங்கள் கட்டித் தழுவத் துடிக்கின்றன.

பிறகு எண்ணிப் பார்க்கின்றார்கள்! அவருடைய தாயார் இணைவைப்புக் கொள்கையில இருக்கின்றார். தீனுடைய - இறைநெறியுடைய பிணைப்பு குடும்பப் பிணைப்பை விட சக்திவாய்ந்ததாகும். திருக்குர்ஆன் இப்படி அறிவுறுத்தியுள்ளது.

(நபியே) அல்லாஹ்வின் மீதும் மறுமைநாளின் மீதும் நம்பிக்கை கொண்ட மக்கள், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எவர்கள் விரோதித்துக் கொண்டார்களோ அவர்களை நேசிக்கக் கூடியவர்களாய் இருக்கக் காணமாட்டீர், அப்படிப்பட்டவர்கள் அவர்களின் தந்தையராகவோ மகன்களாகவோ சகோதரர்களாகளோ அவர்களுடைய குடும்பத்தினராகவோ இருந்தாலும் சரியே! (அல்குர்ஆன் 58:22)

அஸ்மா (ரழி) அவர்களின் உள்ளத்தில் இந்தக் கருத்துக்களெல்லாம் நிழலாடுகின்றன. உடனே கட்டித் தழுவத் துடித்த அவர்களின் கரங்கள் சோர்ந்து விடுகின்றன. கண்கள் பார்வையை தாழ்த்தி விடுகின்றன. அன்புடன் வரவேற்பதற்காக எழுந்த நாவு.. வாருங்கள்| என்று கூற மறுத்துவிட்டது!

என்னுடைய தாயார் நீண்ட நாட்களுக்கப் பிறகு என்னைக் காண வந்திருக்கின்றார். இறைவனை நிராகரித்துக் கொண்டுதான் இருக்கின்றார். அவரை நான் வரவேற்று உபசரிக்கலாமா? என்பதை இறைத்தூதரிடம் கேட்டுச்சொல்' என்று தன் சகோதரி ஆயிஷா (ரழி) அவர்களிடம் தூது அனுப்பினார்கள்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்தார்கள். 'ஆம்! உம்முடைய தாயாருடன் உறவு கொண்டு வாழுங்கள். அவரை வரவேற்று உபசரியுங்கள்' என்று கூறிவிட்டு பின் வரும் இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள். 'எவர்கள் உங்களுடன் தீனின் - இறைநெறியின் விஷயத்தில் போரிடவில்லையோ மேலும் உங்களை உங்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றவில்லையோ அவர்களுடன் நீங்கள் நல்ல முறையிலும் நீதத்துடனும் நடப்பதை விட்டும் அல்லாஹ் உங்களைத் தடுக்கவில்லை. திண்ணமாக அல்லாஹ் நீதி செலுத்துகின்றவர்களை நேசிக்கின்றான். ஆனால் எவர்கள் தீனின் விஷயத்தில் உங்களுடன் போரிட்டார்களோ - மேலும், உங்களை உங்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றினார்களோ, அப்படி வெளியேற்றுவதில் பரஸ்பரம் உதவி செய்தார்களோ அவர்களுடன் நீங்கள் நட்புக் கொள்வதைத்தான் அல்லாஹ் தடுக்கின்றான். அத்தகையவர்களிடம் எவர்கள் நட்புக் கொள்கின்றார்களோ அவர்கள் அநீதியாளர்கள்தான். (அல்குர்ஆன் 60:8)

இத்தகைய நீண்ட வசனத் தொடரை ஓதிக்காட்டி மனிதர்களுக்கிடையிலான நல்ல உணர்வுகளில் இஸ்லாம் என்றைக்கும் குறுக்கீடு செய்யாது. மனத்தில் எழும் உயர்ந்த எண்ணங்களைக் கொன்று விடாது எனும் உண்மையை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அஸ்மா (ரழி) அவர்களுக்கு உணர்த்திய பிறகு, அவர்கள் தம்முடைய தாயாரை நல்ல முறையில் வரவேற்று அன்பளிப்புகளை ஏற்று உபசரித்தார்கள்!

அஸ்மா (ரழி) அவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நம் அனைவருக்கும் நல்லதொரு படிப்பினை இருக்கின்றது. கொள்கையில் மாறுபட்டிருக்கும் நம்முடைய உறவினர்களை விட்டு, கொள்கை மாறுபாட்டிற்காக மட்டும் நம்முடைய தொடர்பை துண்டித்துக் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. அப்படிச் செய்வது தவறாகும். அதுவும் இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு விடுக்க வேண்டிய பொறுப்புடைய முஸ்லிம்கள் அப்படிச் செய்வது அறவே கூடாது. இரத்த பந்தமுடைய அனைத்து உறவினர்க்கும் அவர்களுக்குரிய உரிமைகளையும் கடமைகளையும் வழங்கத்தான் வேண்டும்.

ஆனால் நம்முடைய கொள்கைக்கு யார் கேடு விளைவிக்க முற்படுகின்றார்களோ, நம்முடைய உயிருக்கும் உடமைக்கும் இழப்பை ஏற்படுத்த முயல்கின்றார்களோ அத்தகையவர்களுடன் மட்டும்; அவர்கள் எவ்வளவுதான் நெருக்கமானவர்களாய் இருப்பினும் நட்பு ரீதியிலான தொடர்பை நீடிக்கச் செய்ய நமக்கு உரிமை இல்லை! இந்தத் தெளிவான கோட்பாட்டை அஸ்மா (ரழி)யின் வரலாறு நமக்க வழங்குகின்றது!

வீரம்

அஸ்மா (ரழி) அவர்கள் இவ்வாறு கொள்கையில் எஃகு போன்ற உறுதியும் பொறுமையும் பெற்றிருந்த அதே நேரத்தில் வீரத்திலும் சிறந்து விளங்கினார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மரணமைடந்த பிறகு ஒருமுறை அஸ்மா (ரழி) அவர்கள் தம்முடைய கணவர் மற்றும் மகனுடன் ஷாம் தேசத்தின் போர்க்களத்தில் பங்கு பெற்றார்கள் என்று ஓர் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் மிகப் பயங்கரமாக நடைபெற்ற யர்மூக் யுத்தத்தில் பிற பெண்களுடன் சேர்ந்து தங்களுக்கே உரிய முக்கியமான போர்ப்பணிகளை ஆற்றியுள்ளார்கள்.

மதீனாவில் ஸயீத் இப்னு ஆஸ் (ரழி) அவர்கள் ஆளுநராக இருந்தபோது இரவு நேரங்களில் திருட்டும், கொள்ளையும் வழிப்பறியும் பரவலாக நடைபெற்று வந்தன. மக்களை பெரும் பீதியும் அச்சமும் ஆட்கொண்டிருந்தன. அப்போது அஸ்மா (ரழி) அவர்கள் தம்முடைய தலைக்கருகில் பட்டாக்கத்தியை வைத்துக் கொண்டுதான் இரவில் தூங்குவார்களாம். 'ஏன் இவ்வாறு செய்கின்றீர்கள்?' என்று மக்கள் கேட்டபோது, 'திருடனோ, கொள்ளைக்காரனோ என்னுடைய வீட்டுக்கு வந்தால் இந்தக் கத்தியினால் அவனுடைய வயிற்றைக் கிழித்து விடுவேன்' என்று பதிலளித்தார்கள்.

தாய், மகனுக்கு ஆற்றிய உரை

அன்னை அஸ்மா (ரழி) அவர்களின் வீர வரலாறு இத்துணை உறுதியான மனநிலையையும் வீர உணர்வையும் ஒரு பெண்மணி பெற்றிட முடியுமா என்ற சிந்தனையிலும் திகைப்பிலும் நம்மை ஆழ்த்திவிடுகின்றது! அவர்களுடைய மகனார் அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரழி) அவர்களின் வீர மரணத்தின்போது சில நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அவற்றைக் கேள்விப்படும் ஒவ்வொருவரின் இதயத்திலும் அன்னை அஸ்மா (ரழி) அவர்களைப் பற்றிய மிக உயர்ந்த மரியாதையும் மதிப்பச்சமும் நிறைந்துவிடும் என்பது திண்ணம்! வரலாற்றுத் தொகுப்புகளில் பொன்னெழுத்துக்களால் பாதுகாக்கப்பட்டுவரும் அந்நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகக் காண்போம்.

வரலாறு சான்று வழங்குகிறது :- ஜூபைர் (ரழி) அவர்களின் குடும்பம் துணிவிலும் வீரத்திலும் தன்னிகரற்றுச் சிறந்து விளங்கும் குடும்பமாகும். புகழுக்குரிய இந்த வீரதீரப் பண்பு அக்குடும்பத்தின் முன்னோர்கள் - உறவினர்களிடமிருந்து பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து வரும் சிறப்பம்சமாகும்.

ஜூபைர் (ரழி) அவர்களுடைய ஆண் மக்களில் மிகச் சிறந்த வீரராகவும் துணிவுமிக்கவராகவும் விளங்கியவர் அப்துல்லாஹ் (ரழி) அவர்களாவர். அன்று ஹிஜ்ரத் சகாப்தத்தின் தொடக்கத்தில் முஹாஜிர்களுடைய எந்தக் குடும்பத்திலும் குழந்தை பிறக்காதிருந்த நிலையில் முதல் குழந்தையாக| அஸ்மா (ரழி) அவர்கள் வீட்டில் பிறந்து, அண்ணல் நபி (ஸல்) அவர்களின் சிறப்புக்குரிய பிரார்த்தனையைப் பெற்றவர் இவர்தான். எவருடைய பெயரைக் கேட்டதும் பனூஉமையாக்களின் கலீஃபாக்கள் அச்ச மேலீட்டால் இரவு முழுவதும் தூக்கம் வராமல் தவித்தார்களோ அவர் - ஜூபைரின் மகனாராகிய இந்த அப்துல்லாஹ்தான்!

இவருடைய தியாக வரலாறு என்ன?

அமீர் முஆவியா (ரழி) அவர்களுக்குப் பிறகு அவருடைய மகன் யஜீத் ஆட்சிக்கு வந்தார். கிலாஃபத் எனும் இறையாட்சித் தத்துவத்திற்கு எதிராக அவர் கலீஃபாவாக நியமிக்ப்பட்டதை முஸ்லிம் சமுதாயத்தினரில் எந்தத் தலைவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. யஜீதுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் அவர்களில் எவரும் மேற்கொள்ளத் துணிந்தார்களில்லை. ஆனால் இரு தலைவர்கள் மட்டுமே யஜீதுக்கு எதிராகக் குரல் எழுப்பினார்கள். செயல் ரீதியில் அவனுடன் மோதவும் செய்தார்கள். அவர்களில் ஒருவர் - கலீஃபா அலீ (ரழி) - ஃபாத்திமா (ரழி) தம்பதியினரின் மகனார் ஹூசைன் (ரழி) அவர்கள். மற்றொருவர்தான் ஜூபைர் (ரழி) - அஸ்மா (ரழி) தம்பதியினரின் வீரத்திருமகனாகிய அப்துல்லாஹ் (ரழி) அவர்கள்!

யஜீதின் படையினர் ஹுசைன் (ரழி) அவர்களின் எதிர்ப்பை சிலமணி நேரங்களில் முறியடித்து விட்டார்கள். ஆனால் அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரழி) அவர்களை எளிதில் முறியடிக்க முடியவில்லை! உண்மை யாதெனில் பனூ உமையாக்கள், அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரழி) அவர்களின் எதிர்ப்பைச் சமாளித்து - தங்களுடைய ஆட்சியதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளப் பெரும் சிரத்தை எடுக்க வேண்டியதாயிருந்தது! ஆகையால் யுத்தங்களின் ஒரு நீண்ட தொடர் ஆரம்பமாகி, அப்துல்லாஹ் (ரழி) அவர்களின் வீரமரணத்துடன் முடிவுற்றது.

அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரழி) அவர்களின் வீரமரண நிகழ்ச்சி, பல உன்னதமான படிப்பினைகளை தன்னுள் கொண்டுள்ளதாகும். ஆனால் இங்கே அஸ்மா (ரழி) அவர்களுடன் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை மட்டும் விவரிக்கின்றோம். ஏனெனில் அவர்களுடைய வீரக்காவியத்தின் சில முன்மாதிரிகளை விளக்குவதுதானே நமது நோக்கம்!

அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரழி) அவர்கள் தொடர்ந்து யஜீதை எதிர்த்துப் போராடி வந்தார்கள். யஜீதுக்குப் பிறகு மர்வான் என்பவர் கலீஃபா| ஆனார். இவரையும் மிகத்துணிவுடன் வெற்றிகரமாக எதிர்த்து வந்தார்கள். மர்வானுக்குப் பிறகு அப்துல் மலிக் ஆட்சிக்கு வந்தார். இவருக்கு மிகவும் அறிவுத்திறன் கொண்ட, திட்டமிட்டு செயல்படுத் சூட்சுமம் தெறிந்த ஓர் ஆளுநர் கிடைத்தார். ஹஜ்ஜாஜ் இப்னு யுசுஃப் என்று வரலாற்றில் பிரபலமாக அறியப்படும் ஆளுநர்தான். அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரழி) அவர்கள் பெற்று வந்து செல்வாக்கையும் ஈட்டிவந்த ஆதரவுகளையும் குலைத்தார்!

அவரால் எவ்வாறு வெற்றியடைய முடிந்தது என்பது நமது தலைப்பை விட்டு தூரமான விஷயமாகும். உண்மையாதெனில், ஹஜ்ஜாஜ் தமது திட்டமிட்ட நடவடிக்கைகளின் மூலம் வெற்றிகளைப் பெற்றார். அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரழி) அவர்களை அவர் எந்த அளவுக்கு அடக்கி ஒடுக்கினாரெனில் இறுதியில் அவர்கள் கஅபா ஆலயத்தினுள் அடைக்கலம் புகுந்து ஒளிந்திட நேரிட்டது!

ஹஜ்ஜாஜ் அதுமட்டுமா செய்தார்? அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரழி) அவர்களை விட்டு அவர்களின் ஆதரவாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக விலகுவதற்கும் பிறகு தன்னிடம் வந்து சேருவதற்கும் உரிய அனைத்து சூழ்ச்சிகளையும் மேற்கொண்டார். இறுதியில் உயிர்த்தியாகிகளாய் விளங்கிய, வாய்மையான வீரர்கள் ஒருசிலரே அவர்களுடன் இருந்தார்கள்.

இந்நிலையில் ஹஜ்ஜாஜை எதிர்த்து மேற்கொள்ளும் போர் எப்படி வந்து முடியும் என்பது அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரழி) அவர்களுக்குப் புலப்பட்டது! அவர்கள் போர்க்கவசம் அணிந்து ஆயுதம் ஏந்திய வண்ணம் தம் தாயாரின் சமூகத்திற்கு வந்தார்கள். அவர்களைச் சந்தித்து விடைபெற்றுச் செல்வதற்காக! அது அவர்களது இறுதிச் சந்திப்பாகவும் இருந்தது.

அஸ்மா (ரழி) அவர்களுக்கு அப்போது 100வது வயது நெருங்கிக் கொண்டிருந்தது. அவர்கள் பார்வை மங்கிப்போய் விட்டிருந்தது. அவர்களின் பெருமைக்குரிய மகனார் எதிரே வந்து நின்றார். போரின் போக்கு எவ்வாறு உள்ளது என்பதையும் எதிர்ப்பட்டுள்ள நிலைமைகளையும் விவரித்துவிட்டு, இப்போது என்ன செய்யவேண்டும் என்று ஆலோசனை கோரினார் தாயாரிடம்!

மகனாரின் இந்தக் கேள்விக்கு சித்தீகுல் அக்பரின் மூத்த புதல்வி அளித்த பதில் வார்த்தைகளை வரலாறு பொன் எழுத்துக்களால் பதிவு செய்து வைத்துள்ளது. அவை இதோ :-

அன்பு மகனே! எது உனக்கு நன்மை அளிக்கக் கூடியது என்பதை நீயே நன்கு அறிவாய். நீ சத்தியத்தின் பக்கம்தான் இருக்கின்றாய் என்பதில் உனக்கு உறுதி இருந்தால், நீ நிலைகுலையாதிருக்க வேண்டும். நீ ஆண்மகனைப் போன்று போரிடு! உயிருக்கு அஞ்சி எவ்வித இழிவையும் சுமந்து கொள்ளாதே! வாளேந்திப் போரிட்டு கண்ணியமாக மரணிப்பது, இழிவுடன் இன்பமாய் வாழ்வதை விடச் சிறந்ததாகும். நீ வீரனாக மரணம் அடைந்தால் அப்போது நான் மகிழ்வேன். ஆனால் அழிந்து போகும் இந்த உலகை| வணங்கி வழிபடுவாயானால் உன்னை விடவும் கெட்டவன் வேறு யார் இருக்கமுடியும்? அதாவது, தானும் அழிந்து அல்லாஹ்வின் அடியார்களையும் அழிவில் சேர்க்கக் கூடிய அளவுக்கு கேடுகெட்டவன் அப்போது நீயாகத்தான் இருக்கமுடியும்! எனவே, நாம் மட்டும்தானே தன்னந்தனியாக எதிர்க்கின்றோம், ஆகவே இப்பொழுது கீழ்படிந்து செல்வதைத் தவிர வேறு வழி இல்லை என்று நீ கருதுவாயானால் - இவ்வாறு கருதுவது உன் சான்றோரின் போக்கு அல்ல! நீ எது வரையில் உயிர் வாழ்ந்திடுவாய்? என்றாவது ஒருநாள் மரணம் அடையத்தானே போகிறோம்! எனவே நற்பெயருடன் மரணமாகு, அப்பொழுதான் பெருமைப்படுவேன்!'

அன்னை அஸ்மா (ரழி) அவர்களின் இந்த வார்த்தைகளை மீண்டும் ஒரு முறை கவனமாய் படித்துப் பாருங்கள். இப்பொழுது போரில் இறங்குவதெனில், அது மரணத்தை வலிந்து அழைப்பதற்கு சமமாகும் என்பதையும் - தம்முடைய அன்பு மகனார் கண்ணெதிரிலேயே மரணப்படுகுழியில் விழப் போகின்றார் என்பதையும் அறிந்த ஒரு தாயார் அளித்த அறிவுரையாகும் இது!

அவருடைய மகனார் எப்படிப்பட்ட புகழுக்குச் சொந்தக்காரர்? அவருடைய கல்வி ஞானத்தையும் சிறப்பையும் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) மற்றும் இப்னு உமர் (ரழி) போன்றோர்களே புகழ்ந்துள்ளார்கள்! அன்று வீரத்திற்கும் விவேகத்திற்கும் அவருக்கு நிகர் அவராகவே திகழ்ந்தார்! அப்படிப்பட்ட உயர் சிறப்புக்குரிய மகனார்...! ஆகா! தாயார் என்றால் இப்படி அன்றோ திகழ்ந்திட வேண்டும்!

அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரழி) அவர்கள் தாயாரின் இத்தகைய துணிவான சொற்களைக் கேட்டதும் மனம் நெகிழ்ந்து பணிவுடன் வேண்டினார்கள்.

என் அன்புத் தாயே, ஷாம் தேசத்து மக்கள் என்னைக் கொன்று எனது உடலைப் பலவிதமாகக் கோரப்படுத்தி விடுவார்களோ எனும் அச்சம் எனக்கு உள்ளதே!||

மகனே, உன்னுடைய எண்ணம் சரிதான்! ஆனால் ஆட்டை அறுத்த பிறகு அதனுடைய தோலை உரிப்பதனாலோ அதன் சதைகளைக் கைமாவாகக் கொத்துவதனாலோ அதற்கு எந்த வேதனையும் ஏற்படாதே!||

உண்மையில் அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரழி) அவர்கள் எதற்காக இவ்வாறு கேட்டார்களெனில் தம்மைக் கொன்று உடலைச் சிதைத்து விடுவார்களோ எனும் அச்சத்தினால் அல்ல, வயது முதிர்ந்த தமது தாய் எவ்வாறு இந்தத் துக்கத்தை தாங்கிக் கொள்கின்றார்கள் என்பதைப் பார்ப்பதற்காகத்தான்!

அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரழி) அவர்கள் தம் தாயார் திருப்தியுடன் இருப்பதை அறிந்ததும் உடனே அவரின் கரங்களைப் பிடித்து முத்தமிட்டவாறு –

என் அன்புத் தாயே! நானும் இவ்வாறுதான் சிந்தித்துக் கொண்டிருக்கின்றேன். அதாவது சத்தியத்திற்கு எதிரில் இந்த உலகம் சாதாரணமானதுதான். மேலும் இஸ்லாத்திற்கும் அதன் கொள்கை கோட்பாடுகளுக்கும் உறுதியும் வலிமையும் சேர்ப்பதற்காகத்தான் இப்பணிகளையெல்லாம் நான் ஆற்றியுள்ளேன்!

இதன் பிறகு அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரழி) அவர்கள் தம் தாயாருக்கு அந்தப் போரின் காரணங்களை விவரித்தார். மேலும் யஜீதுக்கு எதிராக தாம் மேற்கொண்ட போர் சத்தியத்தின் அடிப்படையிலானது என்பதை விளக்கினார். இறுதியில் பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு தம் அன்னையை வேண்டிக் கொண்டபோது அந்த வீரத்தாய் கூறினார் :-

மகனே, இன்'h அல்லாஹ் எனது பொறுமை மக்களுக்கு ஒரு முன் மாதிரியாக அமையும் என்று நான் எண்ணுகிறேன். நீ என் முன்னிலையில் சத்தியத்திற்காக உயிரை விடுகின்றாய் எனில் உனது தியாகம் எனக்கு நன்மை கிடைப்பதற்குக் காரணமாகவும் அமையும்! மேலும் நீ வெற்றி வெற்றி அடைந்தாலோ நான் பெருமகிழ்ச்சி அடைவேன். இப்போது அல்லாஹ்வின் பெயரை மொழிந்தவாறு புறப்படு, என்ன நடக்கிறது என்று பார்!||

இதனைக் கேட்டதும் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் தம் தாயை கட்டித் தழுவினார்கள். அஸ்மா (ரழி) அவர்கள் பார்வை இழந்திருந்திருந்தார்கள். தம் அன்பு மகனை ஆரத் தழுவியபோது அவருடைய உடலின் மீது உருக்குக் கவசம் இருப்பதை கரங்கள் உணர்த்தின.

மகனே, யார் சத்தியத்திற்காக உயிரை தியாகம் செய்ய விரும்புகின்றார்களோ அவர்கள் கவசம் அணிந்து கொள்வதில்லை. எனவே அதனைக் கழற்றிவிடு. உடுப்பை வரிந்து கட்டிக்கொண்டு எதிரிகள் மீது தாக்குதல் தொடு!|| என்று அறிவுறுத்தினார்கள்!

அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரழி) அவர்கள் அவ்விதமே செய்தார்கள். வீரத்துடன் போரில் குதித்து தியாக மரணத்தை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார்கள்!

பிறகு ஹஜ்ஜாஜ் என்ன செய்தார் தெரியுமா? அண்ணல் நபிகளாரின் அன்புத் தோழர் ஒருவரின் உடலை அவருடைய தாயாரிடம் ஒப்படைக்காமலும் முறையாக அடக்கம் செய்ய விடாமலும் கழுமரத்தில் கட்டித் தொங்கவிட உத்தரவிட்டு தான் புரிந்து வந்த கொடுமைகளின் பட்டியலில் இந்தக் கொடூரச் செயலையும் சேர்த்துக் கொண்டார்!

ஒரு கொடுங்கோலன் இனங்காட்டப்பட்டான்!

மறுநாள் அன்னை அஸ்மா (ரழி) அவர்கள் வேலைக்காரப் பெண்மணி ஒருவரின் துணையுடன் தம்முடைய அருமை மகனாரின் உடலைத் தேடி வந்தார்கள். உடல் கழுமரத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தது. அபூபக்கர் சித்தீகின் மூத்த மகள் எஃகு போன்ற – ஏன் - அதனையும் விஞசும் அளவுக்கு மனத்திண்மை பெற்றிருந்தார். அப்பொழுது அவருடைய நாவு உச்சரித்த வார்த்தைகள் என்ன தெரியுமா?

இஸ்லாத்தின் இந்த மாவீரன் - தியாக மறவன் - இன்னும் குதிரையை விட்டு இறங்கவில்லையே!||

ஹஜ்ஜாஜ் இப்னு யுசுஃப் நல்ல பேச்சாற்றல் கொண்டவர். சொல் நயமும் கருத்து வளமும் செறிந்த அவருடைய சொற்பொழிவு மக்களிடம் நல்ல மதிப்பையும் புகழையும் பெற்றிருந்தது! அத்தகைய ஹஜ்ஜாஜிடம் அன்னை அஸ்மா (ரழி) அவர்களுடைய மனவேதனையையும் சோகத்தையும் உள்ளடக்கிய, ஆனால் வீரம் நிறைந்த இந்த வார்த்தைகள் எடுத்துச் சொல்லப்பட்டபோது அவர் கோபத்தால் தன் உதடுகளைக் கடிக்கலானார். நேராக அஸ்மா (ரழி) அவர்களிடம் வந்து ஒரு சொற்போரையே தொடங்கினார்.

உம்முடைய மகன் அப்துல்லாஹ் கஅபா ஆலயத்தினுள் உட்கார்ந்து கொண்டு இறைச் சட்டங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கினாறெனில் அவருக்கு எவ்வளவு துணிச்சல்! ஆகையால்தான் அல்லாஹ் அவர் மீது இந்த வேதனையை இறக்கியுள்ளான்.||

நீ பொய் சொல்கின்றாய்! என்னுடைய மகன் இறைச் சட்டங்களுக்கு எதிராக செயல்படுபவன் அல்லன். அவன் நோன்பாளியாகவும், தஹஜ்ஜூத் -இரவுத் தொழுகை- தொழுபவனாகவும், பரிசுத்தவானாகவும், பக்திமானாகவும் திகழ்ந்தான்! தாய் தந்தையரின் சொல்லை மதித்து நடந்தான். ஆனால் கேள்! அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒருபோது இவ்வாறு கூறியதை நான் கேட்டுள்ளேன். அதாவது ஸகீஃப் கோத்திரத்திலிருந்து இரண்டு மடையர்கள் தோன்றுவார்கள். முதலாமவன் பொய்யனாகவும், இரண்டாமவன் கொடுங்கோலனாகவும் இருப்பார்கள்|| - அதன்படி ஸகீஃப் குலத்தைச் சார்ந்த முக்தார்| எனும் பொய்யனை நான் பார்த்துவிட்டேன். மற்றொருவனாகிய கொடுங்கோலன் இப்பொழுது என் முன்னிலையில் நின்று கொண்டிருக்கிறான்.||

பளீரென சாட்டை கொண்டு தாக்குவது போன்று இந்தப் பதிலைக் கேட்டதும் ஹஜ்ஜாஜின் மனம் துடிதுடித்துப் போய்விட்டது. அவருடைய முகத்தில் இழிவும், கேவலமும் கூத்தாட தலையைத் தாழ்த்தியவாறு கொஞ்ச நேரம் மௌனமானார். நிலவிய நிசப்தத்தை சீக்கரமாகக் கலைத்துக் கொண்டு, உம்முடைய மகனுக்கு நான் நல்ல பாடம் புகட்டியிருக்கிறேன்,|| என்று பிதற்றினார்!

நீ என்னுடைய மகனின் உலக வாழ்க்கையைத்தான் பாழ்படுத்தினாய், பரவாயில்லை! ஆனால் என் மகனோ உனது மறுமை வாழ்வை பாழ்படுத்திவிட்டானே!

இந்த அழுத்தமான பதிலைக் கேட்டதும் ஹஜ்ஜாஜ் நிதானம் இழந்தார். உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அவருடைய நா உளறிக்கொட்டியது.

இரண்டு வார்களுடைய இந்தக் கிழவி மதியிழந்து போய்விட்டாள்

இந்தக் குத்தல் பேச்சைக் கேட்டதும் அஸ்மா (ரழி) அவர்கள் ஹஜ்ஜாஜை அதட்டியவாறு கூறினார்கள்.

அல்லாஹ்வின் நபியவர்கள் உண்மையைத்தான் உரைத்தார்கள். உண்மையில் எந்தக் கொடுங்கோலனைப் பற்றி நபியவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்களோ அந்தக் கொடுங்கோலன் நீதான். கொடுங்கோலனே, உனது ஆணவப் பேச்சுக்கு இதோ எனது பதில். ஆம், நான் இரண்டு வார்களை உடையவள்தான்! அல்லாஹ்வின் நபிதான் அவ்வாறு பெருமையாகக் கூறி என்னை அழைத்தார்கள். ஆனால் நீயோ நபியவர்கள் சூட்டிய அதே வார்த்தையைக் கூறி என்னை இழிவுபடுத்துகின்றாய்!||

ஹஜ்ஜாஜ் இதற்குப் பதில் ஏதும் கூறாமல் முகத்தைத் திருப்பிருக் கொண்டு போய்விட்டார்!

பிறகு கலீஃபா அப்துல் மலிகிடமிருந்து, அப்துல்லாஹ்வின் உடலை அவருடைய தாயாரிடம் ஒப்படைத்து விடவும்| எனும் கட்டளை வந்தது. அன்னாரது உடலின் ஒவ்வொரு பகுதியும் சிதைத்துக் கோரப்படுத்தப்பட்டிருந்தது!

வாழ்க்கையின் இறுதி நிலையை அடைந்து விட்டிருந்து அஸ்மா (ரழி) அவர்கள், நான் என்னுடைய வீரத்திருமகனின் உடலைப் பெற்று முறையாகக் குளிப்பாட்டி துணிபொதிந்து அடக்கம் செய்யாதவரை எனக்கு மரணம் வரக்கூடாது| என்று பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள்!

அவ்வாறே அவர்களின் பிரார்த்தனை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டது! சிதைக்கப்பட்டும் சிதைந்த நிலையிலும் இருந்த மகனாரின் உடலை – அதன் துயரமான காட்சியைக் கண்டபோதும் அஸ்மா (ரழி) அவர்களின் நாவு அல்லாஹ்வைப் புகழ்ந்து கொண்டிருந்ததெனில்.. அவர்களின் நெஞ்சுரத்தையும் நிதானமிழக்காத பொறுமையையும் வார்த்தைகளால் எப்படி வர்ணிக்க முடியும்!

உடல் மிகவும் கெட்டுப்போய் இருந்தபடியால் மிகவும் பேணுதலுடன் குளிப்பாட்டப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது!

மகனார் அடக்கப்பட்டு ஒரு வாரத்திற்குள் தாயாரும் ஏறக்குறைய 100வது வயதில் மக்கத்து திருநகரில் மரணமடைந்தார்கள்!

இதுதான் அஸ்மா (ரழி) அவர்களின் வீர வரலாறு! நபித் தோழியர்களுள் மிக நீண்டதோர் ஆயுள் காலத்தைப் பெற்றவர்கள் மிகச் சிலரே. அவர்களில் அன்னை அஸ்மா (ரழி) அவர்கள் மிகவும் முக்கியமானவர்கள். வரலாற்றில் நிகழ்ந்த எத்தனையோ ஏற்றத்தாழ்வுகளை அவர்கள் கண்டுள்ளார்கள். இஸ்லாத்திற்கு முரணான முந்திய அறியாமைக்கால வாழ்கை அமைப்பையும் கண்டார்கள். பிறகு அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நபித்துவ வாழ்வு முழுவதையும் - அடுத்து நேர்வழி பெற்ற கலீஃபாக்களின் பொற்கால ஆட்சியையும் காணும் நல்வாய்ப்பைப் பெற்றார்கள்.

மகத்தான சிறப்புடன் திகழ்ந்த தம்முடைய மகனார் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் புகழின் சிகரத்தில் இருந்த காலகட்டத்தையும் பார்த்தார்கள். போரில் கொல்லப்பட்டு கொடூரமாக நடத்தப்பட்ட கோரக்காட்சியையும் பார்த்தார்கள். எண்ணற்ற துன்பங்கள் தொடர்ந்து வந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் இணையிலா உறுதியையும் இறைநம்பிக்கையையும் நிறைந்த பொறுமையையும் துணிவையும்தான் வெளிப்படுத்தினார்கள்.

உயர் பண்புகளையும் உன்னதப் படிப்பினைகளையும் கொண்டு முழு நிலவாய் ஒளிரும் அவர்களின் வாழ்க்கை முஸ்லிம்களுக்கும் பிற மக்களுக்கும் குறிப்பாக தீன் குலப் பெண்மணிகள் அனைவர்க்கும் என்றென்றும் வழிகாட்டும் ஒளி விளக்காய்த் திகழும்!
Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails